• Download mobile app
29 Mar 2024, FridayEdition - 2970
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஸ்ரீ கோமளாம்பிகா சமேத ஸ்ரீ சுந்தரேஸ்வரர் ஆலயம்

September 25, 2018 findmytemple.com

சுவாமி : சுந்தரேஸ்வரர் (சிவன்), அகண்டேஸ்வரர்.

அம்பாள் : கோமளாம்பிகை, ஜேஷ்டா தேவி, துர்கை.

மூர்த்தி : விநாயகர், தண்டபாணி, தட்சிணாமூர்த்தி, மகா விஷ்ணு, பிரம்மா, சண்டிகேஸ்வரர், பைரவர்.

தலவிருட்சம் : மகிழ மரம்.

தலச்சிறப்பு :

இத்தலம் ஏறத்தாழ 1300 வருடம் பழமையானது. கிழக்கு நோக்கி அமைந்துள்ளது சுந்தரேஸ்வரர் ஆலயம். நந்தி, பலிபீடம், மகாமண்டபம் கடந்து கருவறையில் இறைவன் சுந்தரேஸ்வரர் லிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கிறார். மகாமண்டபத்தின் வலதுப்புறம் அகண்டேஸ்வரர் சன்னதி சற்றே உள்ளடங்கி உள்ளது. அடுத்து அன்னை கோமளாம்பிகையின் சன்னதி உள்ளது. அன்னை நின்ற கோலத்தில் தென்திசை நோக்கி அருள்பாலிக்கிறாள். அர்த்த மண்டப நுழைவாயிலில் விநாயகரும், தண்டபாணியும், தெய்வங்களாக தட்சிணாமூர்த்தி மகா விஷ்ணு, பிரம்மாவும் அருள்கின்றனர்.

பிரகாரத்தில் சப்த மாதர்கள், கன்னி மூலை கணபதி, அருணகிரிநாதர், வள்ளி-தேவசேனா சமேத சண்முகநாதர், பாலசுப்பிரமணியர், ஜேஷ்டாதேவி, துர்க்கை, சண்டிகேஸ்வரர், பைரவர், வடகிழக்கு மூலையில் நவகிரக நாயகர்கள் அருள்பாலிக்கின்றனர். இங்கு அருள்பாலிக்கும் ஜேஷ்டா தேவி மிகவும் சிறப்பு வாய்ந்த தெய்வம். மன்னர்கள் போருக்குச் செல்லும் முன் ஜேஷ்டா தேவியின் காலடியில் தங்களது வாளை வைத்து வணங்கி விட்டே சொல்வார்களாம். அதே போல், எந்தச் செயலை தொடங்குவதாக இருந்தாலும், முதலில் அன்னை ஜேஷ்டா தேவியை வணங்கியபின் தொடங்கினால் வளர்ச்சியும் வெற்றியும் நிச்சயம் என்பது நம்பிக்கை.

தல வரலாறு :

சோழநாட்டை ஆண்டு வந்த மன்னன் ஒருவனுக்கு பெண் குழைந்தை ஒன்று பிறந்தது. ஆனால் குழந்தையின் உடலமைப்பு மனித உருவில் இருந்த போதிலும் முகம் மட்டும் நரி ரூபத்தில் இருந்தது. மன்னர் இந்த குறையை சரி செய்வதற்காக அனைத்து கோவிலுக்கும் சென்று இறைவனுக்கு பரிகாரம், பிராத்தனைகள் செய்து, தீர்வு தேடி கொண்டு இருக்கும் போது நங்கைவரம் அடைந்தார். அன்று இரவு அம்மன் மன்னரின் கனவில் வந்து மகாராஷ்டிராவில் பஞ்சவடி என்று சிற்றூரில் முனிவர் ஒருவர் லிங்க பிரதிஷ்டை செய்து, தினமும் பூஜித்து வருகிறார். அந்த லிங்கத்தை இங்கு கொண்டு வந்து ஆலயம் கட்டி, பிரதிஷ்டை செய்! நீ தினமும் அந்த லிங்கத்தை வழிபட்டு வந்தால் “உன் பெண்ணின் நரிமுகம் மாறி, நங்கை முகமாகும்” என்றார். அரசன் உடனே படைகளை பஞ்சவடிக்கு அனுப்பினான். அங்கு முனிவர் ஆழ்ந்த நிஷ்டையில் இருக்கும் போது, படை வீரர்கள் அந்த லிங்கத்தை எடுத்து வந்து மன்னரிடம் கொடுத்தனர்.

இறைவனின் ஆணைப்படி, மன்னர் “அரிஞ்சிகை சதுர்வேதி மங்கலம்” என்ற ஊரில் ஓர் ஆலயம் கட்டி, அந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்தான். தினமும் இறைவனை பூஜை செய்ய, அவரது மகளின் நரிமுகம் மாறத் துவங்கியது. விரைவில் நங்கையாக மாறிய அவள் பேரழகியாகத் திகழ்ந்தாள். இறைவன், நங்கையின் முகம் மாற வரம் கொடுத்ததால், “அரிஞ்சிகை சதுர்வேதி மங்கலம்” என்ற ஊர் “நங்கை வரம்’ என்று அழைக்கப்பட்டு, தற்போது “நங்கவரம்” என அழைக்கப்படுகிறது.

பஞ்சவடியில் தான் பூஜித்து வந்த சிவலிங்கத்தைக் காணாது வேதனையடைந்தார் முனிவர் ஒரு நாள் அவர் கனவில் தோன்றிய இறைவன், அந்த சிவலிங்கம் இருக்கும் இடத்தைக் காட்டியருளினார். பல மாதங்கள் காடு, மலை கடந்து அந்த சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்ட நங்கவரத்தை நள்ளிரவில் அடைந்தார் முனிவர். ஆலயத்தின் கதவுகள் சாத்தப்பட்டிருந்ததால் கோயிலின் மதில் மேல் ஏறி உட்புறம் குதித்தார். தரை சேறும் சகதியுமாக இருந்ததால் அவரது இரு கைகளும் அதில் புதைய, அங்கேயே சிலையாகிவிட்டார். இன்றும் அதே கோலத்தில் முனிவரை அங்கு தரிசிக்கலாம்.

முனிவர் அகண்டேஸ்வரர் தீண்டாத் திருமேனி என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார். இங்கு மூலவர் சிவபெருமானுக்கு என்னென்ன பூஜைகள் நடைபெறுகிறதோ அவையனைத்தும் முனிவருக்கும் நடைபெறுகிறது. அகண்டேஸ்வரரை தொடாமல்தான் அனைத்து பூஜைகளும் நடைபெறுகின்றன. நெற்றியில் சந்தனப் பொட்டை வைக்க, சற்றுத் தொலைவில் இருந்து சந்தனத்தை நெற்றியை நோக்கி வீசி, பொட்டை பதிய வைக்கின்றனர்.

வழிபட்டோர் : அகண்டேஸ்வரர், சோழநாட்டு மன்னன்.

நடைதிறப்பு : காலை 6.00 முதல் மதியம் 12.00 வரை, மாலை 4.00 முதல் இரவு 8.00 வரை.

பூஜை விவரம் : நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன.

திருவிழாக்கள் :நவராத்திரி,ஐப்பசி மாத சஷ்டியின் போது சுரசம்ஹார விழா,ஐப்பசி பெளர்ணமியில் இறைவனுக்கு அன்னாபிஷேகம்,கார்த்திகை சோமவாரத்தின் போது 108 சங்காபிஷேகம் நடைபெறும்.

அருகிலுள்ள நகரம் : திருச்சி.

கோயில் முகவரி : ஸ்ரீ கொமளாம்பிகா சமேத ஸ்ரீ சுந்தரேஸ்வரர் ஆலயம்,நங்கைவரம், கரூர் மாவட்டம்.

மேலும் படிக்க