August 9, 2018
தண்டோரா குழு
ஜெர்மனியிலிருந்து பெங்களூரு விமான நிலையத்தில் வந்திறங்கிய,மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக மே பதினெழு இயக்கம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
“தூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் திருமுருகன் காந்தி பதிவு செய்துவிட்டு திரும்பிய போது,பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.வரும் ஞாயிறு அன்று பெங்களூரில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக கருத்தரங்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காரணத்தினால் பெங்களூர் விமான நிலையத்தில் இன்று காலை வந்து இறங்கினார்.
இந்நிலையில் தூத்துக்குடி படுகொலையை ஐ.நாவில் பேசியதற்காக பழைய போராட்ட வழக்குகளை காரணம் காட்டி திருமுருகன் காந்தி பெங்களூரில் கைது செய்யப்பட்டுள்ளார்.பாஜக அரசு மற்றும் எடப்பாடி பழனிச்சாமி அரசின் இந்த அடக்கு முறையினை வன்மையாக கண்டிப்போம்.” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில்,விடுதலை புலிகள் மீதான தடையை நீக்க கோரி ஜெர்மனியில் உரையாற்றிய திருமுருகன் காந்தி,ஐ.நாவில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு மற்றும் 8 வழிச்சாலை விவகாரங்கள் குறித்து பேசியதாகவும் தெரிகிறது.
மேலும்,விமான நிலையக் காவலர்கள் அவரை கைது செய்து,சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளதாகத் தெரிவித்தனர்.அவர் மீது தேச துரோக வழக்கு நிலுவையில் உள்ளதால்,அவர் எந்த விமான நிலையம் வந்தாலும் கைது செய்யும் படி லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதாக திருமுருகன் காந்தியை கைது செய்த போலீசார் தெரிவித்துள்ளனர்.
திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டது குறித்து சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.தற்போது அவர்கள் பெங்களூரு விரைந்தனர்.விரைவில் திருமுருகன் காந்தி சென்னை அழைத்து வரப்படவுள்ளார்.