• Download mobile app
07 May 2024, TuesdayEdition - 3009
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டிசம்பர் 26 சுநாமி நினைவு தினம்

December 26, 2016 பா.கிருஷ்ணன்

இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருவான்மியூர் திருவள்ளுவர் நகர் குறுக்குத் தெருவில் திடீரென்று யாரோ “சுநாமி!.. சுநாமி!” என்று சத்தம் போட்டனர். கையில் கொஞ்சம் சப்பாத்தி, பிஸ்கட்..

அந்த சத்தத்தைக் கேட்டாலும், அப்பகுதியினர் யாரும் பதறியதாகவே தெரியவில்லை. வழக்கம்போல தங்கள் வேலையில் ஈடுபட்டிருந்தனர். மீன் விற்றுக் கொண்டிருந்தார் ஒரு பெண். சைக்கிளில் ஒருவர் சென்று கொண்டிருந்தார். ஒரு குழந்தை வாசலில் விளையாடிக் கொண்டிருக்க, ஓர் அம்மணி காய்கறி பேரம் பேசிக் கொண்டிருந்தார். லாண்டரி காரர் துணியைத் தேய்த்துக் கொண்டிருந்தார். என்ன மீண்டும் ஒரு சுநாமியா என்ற சந்தேகம் ஏற்பட்டது.

“சுநாமி, இங்கே வா” என்று பிஸ்கெட்டுடன் காத்திருந்த பெண் அழைத்தபோது, அவள் முன்னே அழகாக வாலைக் குழைத்தபடி நின்றிருந்தது அந்த நாய். நான் அருகில் இருந்த லாண்டரிகாரர் பழனியைக் கேட்டேன். “அதுங்களா.. அந்த நாய் பேர்தான் சுநாமி..” என்றார்.

“என்ன இந்த நாய்க்குத்தான் சுநாமின்னு பேரா…” என்றேன் ஏகப்பட்ட வியப்புடன். அந்தப் பெண் லாண்டரிகாரரின் மனைவி நாய்க்கு பிஸ்கெட், சப்பாத்தித் துண்டு போட்டுவிட்டு சொன்னார்:

“சார், இது பத்து வருஷம் முன்னே நம்ம கடல் பக்கம் வந்ததே சுநாமி.. அதுலே உயிர் தப்பி பிழைச்சு வந்தது… எங்களுக்கெல்லாம் செல்லம்..” என்று அதன் வரலாற்றையே விவரித்தார்.

2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 கடற்கரையைத் தாக்கி ஆயிரக் கணக்கானோரை வாரிக் கொண்ட சுநாமி வந்த சமயம். திருவான்மியூர் கொட்டிவாக்கம் கடற்கரையில் சுநாமிக்குத் தப்பியவர்கள், சுநாமி அடங்கியபோது, மீட்பு வேலையில் ஈடுபட்டிருந்தனர். கடல் நீர் உள்ளே திரும்பிப் போய்விட்டது.

கொட்டிவாக்கம் கடற்கரையில் கொஞ்சம் மணல் திட்டு இருந்தது. அதனால், சில இடங்களில் பாதிப்பு குறைவாக இருந்தது. அந்தக் கரையோரம் இருந்த ஒரு கோவிலில் இருந்து விநோதமான சத்தத்தை அங்கிருந்தவர்கள் கேட்டனர்.

ஈனஸ்வரத்துடன் ஒரு நாய்தான் முனகியது என்பதைக் கணத்தில் புரிந்து கொண்ட ஒரு பெயிண்டர் கோயிலுக்குள் எட்டிப் பார்த்தார். அந்தக் கோயிலில் அந்த நேரம் பூசை எதுவும் நடக்கவில்லை. கதவு மட்டும் கிரில் போட்டிருந்தது. உள்ளுக்குள்ளே குட்டி நாய் முழுக்க நனைந்து வெடவெடவென்று நடுங்கியபடி பயத்தில் முனகிக் கொண்டிருந்தது.

அது, அப்போதுதான் பிறந்த குட்டி என்பதை பெயிண்டர் புரிந்துகொண்டு, கையில் எடுத்தார். கரைக்குக் கொண்டுவந்து, துவட்டினார். கொஞ்ச நேரம் கழித்து அசைந்த அந்தக் குட்டிக்கு பால், பிஸ்கெட் கொடுக்கப்பட்டது.

அதன் பிறகு, அந்தக் குறுக்குத் தெருவில் உள்ள அனைவரும் அதைப் பராமரிக்கத் தொடங்கினர்.

லாண்டரிகாரர் பழனிக்கும் அது செல்லப் பிராணி. சுநாமி வெள்ளத்தில் தப்பியதால், அதற்கு “சுநாமி” என்றே பெயரிடப்பட்டது.

“இப்போ நல்லா வளர்ந்திடுச்சு.. நடுவிலே… நாலு குட்டிகளைப் பெற்றெடுத்தது. அவையெல்லாம் வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டன டாக்டருங்க கிட்டே கூட்டிட்டுப் போய் தடுப்பூசி, குடும்பத் தடை ஊசி போட்டாச்சு.. இப்பவும் சுநாமின்னு யார் கூப்பிட்டாலும் வாலை ஆட்டிக்கிட்டு பாசமாக போகும் சார்” என்றார் பழனியின் மனைவி லலிதா.

சில தினங்களுக்கு முன் அப்பகுதியில் வசிப்போரைக் கேட்டால், சுநாமியைப் பற்றிய தகவல் இல்லை. அது வேறிடத்திற்குச் சென்றுவிட்டதா, இறந்துவிட்டதா என்ற தகவல் தெரியவில்லை.

மேலும் படிக்க