May 24, 2026
தண்டோரா குழு
இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் பட்டயக் கணக்காளர் (CA) தேர்வில் சமீபத்தில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான பட்டமளிப்பு மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா கோவையில் நடைபெற்றது. இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் நடைபெறும் பட்டமளிப்பு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கோவையிலும் இவ்விழா நடைபெற்றது.
இந்த ஆண்டில் நாடு முழுவதும் சுமார் 10,930 மாணவர்கள் சி.ஏ.தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.கோவையில் முதன்முறையாக நடைபெற்ற இந்த பட்டமளிப்பு விழாவில் சுமார் 110 புதிய பட்டயக் கணக்காளர்களுக்கு பட்டங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
சி.ஏ.ஜி. ராமசாமி,இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் அகில இந்திய முன்னாள் தலைவர் (2011-12),சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
வரவேற்புரையாற்றிய இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் கோவை கிளையின் தலைவர் சுர்வஜித் எஸ் கிருஷ்ணன்,பட்டயக் கணக்காளர் படிப்பிற்கான வரவேற்பும் தேவையும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தெரிவித்தார். திறமையான தொழில்முறை நிபுணர்களை உருவாக்குவதில் Articleship எனப்படும் நடைமுறைப் பயிற்சி மிக முக்கிய பங்கு வகிப்பதாகவும், புதிதாக தகுதி பெற்ற பட்டயக் கணக்காளர்களுக்கான வளாக வேலைவாய்ப்பு (Campus Placement) வாய்ப்புகளும் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சி அடைந்து வருவதாகவும் கூறினார்.
மேலும்,புதிய வருமான வரி சட்டம் மற்றும் தொழில்துறையில் உருவாகி வரும் மாற்றங்களை முன்னிட்டு, ICAI கோவை கிளை உறுப்பினர்களுக்காக தொழில்முறை மேம்பாட்டு நிகழ்ச்சிகள்,கருத்தரங்குகள் மற்றும் அறிவு பகிர்வு அமர்வுகளை தொடர்ந்து நடத்தி வருவதாக தெரிவித்தார். கோவையை முதன்முறையாக பட்டமளிப்பு மையமாக அறிவித்த இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் தலைமையினருக்கு நன்றி தெரிவித்து,இது கோவைக்கு பெருமை சேர்க்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் என குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய சிஏஜி. ராமசாமி,
கோவை ஏற்கனவே தொழில், தொழில்முனைவு மற்றும் கல்விக்காக அறியப்படும் நகரமாக இருப்பதுடன், இந்த பட்டமளிப்பு விழா அதன் தொழில்முறை வளர்ச்சியில் புதிய மைல்கல்லாக அமைந்துள்ளதாக தெரிவித்தார்.இந்த விழா கல்விசார் சான்றிதழ்களை மட்டும் கொண்டாடுவதல்ல;பல ஆண்டுகளாக செய்த உழைப்பு, தியாகம் மற்றும் மாற்றத்தின் வெற்றியையும் கொண்டாடுவதாக அவர் கூறினார்.
பட்டயக் கணக்காளர் தகுதி என்பது தொழில்நுட்ப அறிவை மட்டும் குறிக்கவில்லை;முதலீட்டாளர்கள், நிறுவனங்கள், கட்டுப்பாட்டு அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை சுமக்கும் பொறுப்பையும் குறிக்கிறது என்றார்.
1949 ஆம் ஆண்டு 1,700 உறுப்பினர்கள் மற்றும் 259 மாணவர்களுடன் தொடங்கிய ICAI இன்று உலகின் இரண்டாவது பெரிய கணக்கியல் அமைப்பாக வளர்ந்துள்ளதாகவும்,தற்போது சுமார் 4.1 லட்சம் உறுப்பினர்கள் மற்றும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தியா முழுவதும் சி.ஏ. படிப்பை பயின்று வருவதாகவும் தெரிவித்தார்.
இன்றைய காலகட்டத்தில் பட்டயக் கணக்காளர்களின் பங்கு கணக்குப்பதிவு மற்றும் தணிக்கையைத் தாண்டி, நிர்வாக ஆலோசகர்கள், அபாய மேலாண்மை நிபுணர்கள்,CFO-க்கள், தொழில்முனைவோர் மற்றும் கொள்கை ஆலோசகர்களாக விரிவடைந்துள்ளதாக தெரிவித்தார். சர்வதேச வரிவிதிப்பு, IPO ஆலோசனை, இணைப்பு மற்றும் கையகப்படுத்தல், IFRS போன்ற உலகளாவிய நிதி தரநிலைகளில் அதிக வாய்ப்புகள் உருவாகி வருவதாக கூறினார்.
செயற்கை நுண்ணறிவு (AI), Machine Learning, Robotics Process Automation, Blockchain, Cloud Computing மற்றும் Advanced Analytics போன்ற தொழில்நுட்பங்கள் இந்தத் தொழிலை வேகமாக மாற்றி வருவதாகவும், தொழில்நுட்பத்தை அச்சமாக அல்லாது புதிய வாய்ப்பாக பார்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
“பெரிய அளவிலான தரவுகளை புரிந்து கொண்டு அதன் மூலம் தீர்மானங்களை எடுக்கும் திறன், எதிர்காலத்தில் தொழில்நுட்ப அறிவிற்கு இணையாக முக்கியமானதாக இருக்கும்” என்றார்.
மேலும் Virtual CFO சேவைகள், Remote Audit மற்றும் Digital Collaboration Platforms மூலம் உலகின் எந்த பகுதியிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கும் சூழல் உருவாகி வருவதாக கூறினார்.
MSME நிறுவனங்களுக்கு கணக்கியல், GST இணக்கம், நிதி ஆலோசனை மற்றும் வளர்ச்சி திட்டங்களில் உதவுவதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்புக்கும் பட்டயக் கணக்காளர்கள் பங்களிக்க முடியும் என்றும் கூறினார்.
சர்வதேச வரிவிதிப்பு சீர்திருத்தங்கள், BEPS விதிமுறைகள், டிஜிட்டல் வரிவிதிப்பு மற்றும் Transfer Pricing போன்ற துறைகளில் தொடர்ந்து அறிவை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் ராஜேஷ், பிராந்திய கவுன்சில் உறுப்பினர், A. V. அருண், பிராந்திய கவுன்சில் உறுப்பினர், மற்றும் இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் கோவை கிளையின் தலைவர் சுர்வஜித் எஸ் கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவின் இறுதியில், புதிதாக தகுதி பெற்ற பட்டயக் கணக்காளர்கள் அனைவரும் கௌரவிக்கப்பட்டு, குடும்பத்தினரும் முக்கிய பிரமுகர்களும் முன்னிலையில் அவர்களுக்கு பட்டங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.