August 27, 2026
தண்டோரா குழு
சென்னை மணலியில் 15 ஏக்கர் பரப்பளவில் சதுப்புநில மறுசீரமைப்பை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வரும் ‘சுற்றுச்சூழல் செயல்பாடு மற்றும் கற்றல் மையம்’ (Eco Action & Learning Hub) திட்டத்திற்கு அக்சென்ச்சர் ஆதரவளித்து வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டலம் 2 (மணலி மண்டலம்) மற்றும் ‘ஃபார்மர்ஸ் ஃபார் ஃபாரஸ்ட்ஸ்’ (Farmers for Forests) என்ற இலாப நோக்கற்ற அமைப்புடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
உள்ளூர் சமூகத்தினர் சுற்றுச்சூழல் நீடிப்புத்தன்மை குறித்து அறிந்துகொள்வதற்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் நேரடியாகப் பங்கேற்பதற்கும் இந்த மையம் வாய்ப்பளிக்கும். இந்தியாவில் அக்சென்ச்சர் மற்றும் ஃபார்மர்ஸ் ஃபார் ஃபாரஸ்ட்ஸ் இணைந்து உருவாக்கும் மூன்றாவது Eco Action & Learning Hub இதுவாகும். முன்னதாக மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் உள்ள மஞ்சாரில் 12 ஏக்கர் பரப்பிலும், கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள நிருத்யாகிராமில் 10 ஏக்கர் பரப்பிலும் இதுபோன்ற மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
சென்னை மணலியில் உள்ள இந்தத் திட்டம், மாசடைந்த தொழிற்பேட்டை நிலப்பரப்பை புனரமைக்கப்பட்ட சதுப்புநிலச் சூழலியல் மண்டலமாக மாற்றுவதில் முக்கிய பங்கு வகித்துள்ளது. சுற்றுச்சூழல் தாங்குதிறனை மேம்படுத்துவதுடன், வெள்ள அபாயத்தைக் குறைக்கும் வகையில் குளங்கள், ஆழமான நீர்நிலைப் பகுதிகள், நீர் வழித்தடங்கள் மற்றும் பல்வேறு வாழ்விட மண்டலங்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு இறுதிக்குள் இப்பகுதியில் 19,000-க்கும் மேற்பட்ட பூர்வீக மரங்கள் மற்றும் புதர்கள் வளர்க்கப்பட உள்ளன. இதன் மூலம் பறவைகள், மகரந்தச் சேர்க்கை செய்யும் உயிரினங்கள், பூச்சிகள் உள்ளிட்ட பல்வேறு சதுப்புநில உயிரினங்களுக்கு ஏற்ற வளமான பல்லுயிர்ச் சூழல் உருவாகும்.
இந்த Eco Action & Learning Hub-ல் உள்ளூர் சமூகத்தினர் மற்றும் பள்ளி மாணவர்களுக்காக வழிகாட்டிகளுடன் கூடிய இயற்கைச் சுற்றுலா, பறவைகளைப் பார்வையிடுதல், சுற்றுச்சூழல் நீடிப்புத்தன்மை குறித்த பயிலரங்குகள் மற்றும் பல்வேறு செயல்விளக்கங்கள் நடத்தப்படும். புதுப்பிக்கத்தக்க ஆற்றல், வட்டப் பொருளாதாரம், கழிவு மேலாண்மை, நீடித்த உணவு முறைகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறை உள்ளிட்ட தலைப்புகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
மேலும், பார்வையாளர்கள் மரம் நடுதல், பல்லுயிர் கண்காணிப்பு, எருவாக்கம், பெர்மாகல்ச்சர் தோட்டம் அமைத்தல் மற்றும் சதுப்புநில மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் பங்கேற்க முடியும். பூர்வீக நாணல் புற்களை நடுதல், ஆக்கிரமிப்புத் தாவரங்களை அகற்றுதல் மற்றும் உள்ளூர் விலங்கினங்களுக்கான வாழ்விடங்களை உருவாக்குதல் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்படும். சூரிய மின்சக்தியில் இயங்கும் இந்த மையத்தில் மழைநீர் சேகரிப்பு மற்றும் மண் பாதுகாப்பு நுட்பங்களும் இடம்பெற்றுள்ளன.
இந்த புதிய மையம், இந்தியாவில் அக்சென்ச்சர் ஆதரவளிக்கும் மஞ்சார் மற்றும் நிருத்யாகிராம் Eco Action & Learning Hubs-ன் வெற்றியைத் தொடர்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில், இந்த இரண்டு மையங்களையும் 30,000-க்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். இதில் 15,000 பள்ளி மாணவர்கள், உள்ளூர் சமூகத்தினர் மற்றும் அக்சென்ச்சர் ஊழியர்கள் அடங்குவர். மஞ்சார் மற்றும் பெங்களூரு மையங்கள் இணைந்து 27,000-க்கும் மேற்பட்ட மரங்களையும், 200-க்கும் மேற்பட்ட தாவர மற்றும் விலங்கு இனங்களையும் கொண்டுள்ளன.
இந்தியாவில் அக்சென்ச்சரின் சீனியர் கண்ட்ரி மேனேஜிங் டைரக்டர் அஜய் விஜ் கூறுகையில்,
“எங்களது மக்கள், சமூகங்கள் மற்றும் பூமியின் மீதான பொறுப்புணர்வு அக்சென்ச்சரின் செயல்பாடுகளில் முக்கிய இடம் பெற்றுள்ளது. கல்வியும் சமூகப் பங்களிப்பும் விழிப்புணர்வை செயல்பாடாக மாற்ற உதவும் என நாங்கள் நம்புகிறோம். சுற்றுச்சூழல் நீடிப்புத்தன்மையை மக்கள் நேரடியாக அனுபவிப்பதற்கான வாய்ப்பை உருவாக்குவதன் மூலம், சுற்றுச்சூழல் பொறுப்பு குறித்த புரிதலை மேம்படுத்தி, அடுத்த தலைமுறையினரை ஊக்குவிக்க விரும்புகிறோம்” என்றார்.
அக்சென்ச்சரின் ஆசிய பசிபிக் கார்ப்பரேட் சிட்டிசன்ஷிப் பிரிவு லீட் மனிஷா பட்டாச்சார்யா கூறுகையில்,
“மகாராஷ்டிராவின் மஞ்சார் மற்றும் பெங்களூருவின் நிருத்யாகிராம் முதல் சென்னையின் புதிய Eco Action & Learning Hub வரை, ஒவ்வொரு மையமும் அந்தந்த சமூகங்களின் சுற்றுச்சூழல் தேவைகள் மற்றும் முன்னுரிமைகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் நீடிப்புத்தன்மையை மக்கள் நேரடியாகப் புரிந்துகொள்ளவும் பங்கேற்கவும் இந்த மையங்கள் வாய்ப்பளிக்கின்றன. அதே நேரத்தில், பல்லுயிர் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் உள்ளூர் சமூகங்களும் இம்மையங்களின் வளர்ச்சிக்கு பங்களிக்கின்றனர்” என்றார்.