January 16, 2021 தண்டோரா குழு
கோவை இரத்தினபுரி பகுதியில் நெய் வியாபாரி வீட்டில் பூட்டை உடைத்து 100 பவுன் தங்க நகை கொள்ளை போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை அடிக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. நேற்று இரவு சரவணம்பட்டி பகுதியில் இரண்டு வீடுகளில் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த இரண்டு வீட்டிலும் உள்ளவர்கள் வெளியூர் சென்று இருப்பதால் அவர்கள் வந்த பின்புதான் எவ்வளவு கொள்ளை போனது என்பது தெரியவரும். இதே போல மற்றுமொரு சம்பவம் கோவை நகரில் ரத்தினபுரி பகுதியில் அரங்கேறியுள்ளது.
கோவை ரத்தினபுரி ராஜேந்திர பிரசாத் வீதியைச் சேர்ந்தவர் கார்த்திக்(42). நெய் வியாபாரியான இவர் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு குடும்பத்தோடு பெங்களூருக்கு சென்றிருந்தார். இன்று காலை அவரது வீட்டின் அருகில் உள்ளவர்கள் கார்த்திக்கிற்கு போன் செய்து உங்கள் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருக்கிறது என்று கூறினர். இதையடுத்து கார்த்திக் தொலைபேசி மூலம் ரத்தினபுரி போலீசாருக்கு புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று ரத்தினபுரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் . போலீசாரிடம் தொலைபேசியில் கார்த்திக் கூறும்போது வீட்டில் 100 பவுனுக்கு மேல் தங்க நகைகள் வைத்திருந்ததாக கூறி இருக்கிறார். எனவே வீட்டில் உள்ள நகைகள் மொத்தமும் திருடு போய்விட்டதா அல்லது வேறு ஏதேனும் பொருட்கள் திருடு போய் உள்ளதா என்பது கார்த்திக் நேரில் வந்த பிறகுதான் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
கோவை நகரில் தொடர்ந்து நடைபெற்று வரும் கொள்ளைச் சம்பவங்களால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.