August 13, 2026
தண்டோரா குழு
ஸ்கால் இன்டர்நேஷனல் கோயம்புத்தூர் சார்பில்,சுற்றுலாத் துறையினரின் தேசிய மாநாடான ஸ்கால் இந்தியா தேசிய மாநாடு 2026 தொடங்கியது. ஆகஸ்ட் 12 முதல் 15-ம் தேதி வரை கோவை லீ மெரிடியன் ஹோட்டலில் நடைபெறும் இம்மாநாட்டில் இந்தியா முழுவதும் உள்ள சுற்றுலாத் துறை சார்ந்தோர் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
நிகழ்ச்சியினை வி.சம்பத் குமார், பிற்படுத்தப்பட்டோர்,மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை அமைச்சர் மற்றும் சுற்றுலா த்துறை அமைச்சர் எஸ்.ராஜேஷ் குமார் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தனர்.
நிகழ்ச்சியில் ஸ்கால் இன்டர்நேஷனல் இந்தியாவின் தலைவர் சஞ்சீவ் மெஹ்ரா, ஜிடி குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ஜி.டி. ராஜ்குமார்,ஸ்கால் இன்டர்நேஷனலின் 2027ஆம் ஆண்டிற்கான தலைவராகத் தேர்வான என்.எஸ்.என். மோகன், தென்னிந்திய ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் சங்கத்தின் (SIHRA) செயல்பாட்டு இயக்குநர் சுந்தர் சிங்காரம், பியூச்சர் கேமிங் & ஹோட்டல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பிரதிநிதி,ஸ்ரீ ராமகிருஷ்ணா சுகாதார மற்றும் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் ராமகிருஷ்ணன், கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர் மற்றும் SINC-2026 செயலாளர் கே.முத்துக்குமார் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
கோவையில் முதல்முறையாக இந்த தேசிய மாநாடு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. நான்கு நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஸ்கால் உறுப்பினர்கள், சுற்றுலாத் துறை வல்லுநர்கள் மற்றும் தொழில்துறை சார்ந்த முக்கியப் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.
சுற்றுலாத் துறையின் எதிர்காலம்,புதிய வாய்ப்புகள், தொழில் உறவுகள் மற்றும் கருத்துப் பரிமாற்றம் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.இந்த ஆண்டுக்கான மாநாட்டில் நிலைத்தன்மை மற்றும் பாரம்பரியம் ஆகியவை முக்கிய கருப்பொருள்களாக இடம்பெறுகின்றன. சுற்றுலாத் துறையை பொறுப்புடன் வளர்ப்பதுடன், ஒவ்வொரு சுற்றுலாத் தலத்தின் கலாச்சாரம், சுற்றுச்சூழல் மற்றும் பாரம்பரிய வளங்களைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்தும் மாநாட்டில் கவனம் செலுத்தப்பட உள்ளது.
1934-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஸ்கால் இன்டர்நேஷனல், உலகம் முழுவதும் உள்ள சுற்றுலாத் துறை வல்லுநர்களை ஒருங்கிணைக்கும் சர்வதேச அமைப்பாக விளங்கி வருகிறது. நட்பு, தொழில்முறை தொடர்புகள், வர்த்தக மேம்பாடு மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கான தளமாக செயல்பட்டு வரும் ஸ்கால் அமைப்பின் இந்திய தேசிய மாநாடு, நாட்டின் சுற்றுலா மற்றும் பயணத் துறையினரின் முக்கிய வருடாந்திர சந்திப்பாகத் திகழ்கிறது.
கோவையில் நடைபெறும் மாநாட்டின் மூலம் நகரின் சுற்றுலா வாய்ப்புகளை தேசிய அளவில் வெளிப்படுத்துவதற்கான முக்கிய வாய்ப்பாக அமைந்துள்ளது. தொழில் மற்றும் தொழில்முனைவோர் நகரமாக பரவலாக அறியப்படும் கோவை, பாரம்பரியம், கலாச்சாரம், ஆன்மிகம், இயற்கை, உணவு மற்றும் சிறப்பான விருந்தோம்பல் ஆகியவற்றின் தனித்துவமான கலவையையும் கொண்டுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கான நுழைவாயிலாக அமைந்துள்ள கோவை, வனவிலங்கு மற்றும் பாரம்பரிய சுற்றுலாத் தலங்களுக்கு அருகாமையில் இருப்பதுடன், சிறந்த போக்குவரத்து இணைப்பு மற்றும் விருந்தோம்பல் உள்கட்டமைப்பையும் கொண்டுள்ளது. இதனால் கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுற்றுலாத் துறையை மேலும் மேம்படுத்துவதற்கான குறிப்பிடத்தக்க வாய்ப்புகள் உள்ளன.
மாநாடு குறித்து ஸ்கால் இன்டர்நேஷனல் கோயம்புத்தூர் தலைவர் ரமேஷ் சந்திரகுமார் கூறியதாவது:
ஸ்கால் இந்தியா தேசிய மாநாட்டை கோவைக்கு கொண்டு வருவதில் நாங்கள் மிகவும் பெருமை கொள்கிறோம். தொழில் நகரம் என்ற அடையாளத்தைத் தாண்டி கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சிறப்புகளை தேசிய அளவில் வெளிப்படுத்த இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். இயற்கை, பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் விருந்தோம்பல் ஆகியவற்றின் தனித்துவமான கலவையைக் கொண்ட கோவையில் சுற்றுலாத் துறைக்கு மிகப்பெரிய வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலாத் துறை நண்பர்களை வரவேற்பதுடன், கலந்துரையாடல்கள் மற்றும் புதிய ஒத்துழைப்புகளை உருவாக்க ஆவலுடன் உள்ளோம்.
மாநாட்டின் தலைவர் ஸ்கால். பி.கே. கணேஷ் கூறியதாவது:
சுற்றுலாத் துறையின் எதிர்காலத்தைப் பற்றி விவாதிக்கவும், குறிப்பாக நிலைத்தன்மை மற்றும் பாரம்பரியம் போன்ற முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்தவும் சுற்றுலாத் துறையினரை ஒருங்கிணைப்பதே மாநாட்டின் முக்கிய நோக்கமாகும். இந்த விவாதங்களை முன்னெடுக்க கோவை மிகச்சிறந்த இடமாக அமைந்துள்ளது. மாநாட்டில் பங்கேற்கும் பிரதிநிதிகள் கோவை மற்றும் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு சுற்றுலா வாய்ப்புகளை நேரடியாக அறிந்து கொள்வதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தியுள்ளோம்.
இந்த தேசிய மாநாடு, சுற்றுலாத் துறை வல்லுநர்கள் தங்களது கருத்துகள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும், வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதற்கும், புதிய ஒத்துழைப்பு வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் முக்கிய தளமாக அமையும். மேலும், நிலைத்தன்மை மற்றும் பாரம்பரியம் குறித்த மாநாட்டின் கவனம், பொறுப்பான சுற்றுலா வளர்ச்சி மற்றும் எதிர்கால தலைமுறைகளுக்காக சுற்றுலாத் தலங்களைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்த விவாதங்களுக்கு வழிவகுக்கும் , என்றார்.
மேலும் இதன் சிறப்பு அம்சமாக, மாநாட்டில் பங்கேற்கும் சுற்றுலா முகவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. மேலும், அவர்களை கோவை மற்றும் அதனைச் சுற்றியுள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு நேரடியாக அழைத்துச் சென்று, அங்குள்ள இயற்கை, பாரம்பரியம் மற்றும் சுற்றுலா வாய்ப்புகளை நேரில் அறிந்து அனுபவிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களின் சிறப்புகளை தேசிய மற்றும் சர்வதேச அளவில் கொண்டு செல்வதுடன், அப்பகுதிகளின் சுற்றுலா வளர்ச்சிக்கும் புதிய வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநாடு மூலம் கோவையின் பெயரை தேசிய சுற்றுலா வரைபடத்தில் மேலும் வலுப்படுத்துவதுடன், நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுற்றுலா அனுபவங்களை மேம்படுத்துவதற்கான எல்லையற்ற வாய்ப்புகளை வெளிப்படுத்தும் முக்கிய நிகழ்வாகவும் இது அமையும், என்றார்.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாத் துறை பிரதிநிதிகள் கோவையில் ஒன்றுகூடும் நிலையில், மாநாடு சுற்றுலாத் துறையினரை ஒருங்கிணைப்பதற்கும், கோவையின் மற்றும் தமிழகத்தின் பாரம்பரிய சிறப்புகளை கொண்டாடுவதற்கும், நிலையான மற்றும் சிறப்பான சுற்றுலாவின் எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் முக்கிய தளமாக அமைய உள்ளது.