September 14, 2026
தண்டோரா குழு
கோவை மெடிக்கல் சென்டர் மற்றும் ஹாஸ்பிட்டல் வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த புற்றுநோய் மையத்தின் சார்பில், 2011-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் ‘ரோஸ் டே’ விழா, இந்த ஆண்டும் செப்டம்பர் 13, 2026 அன்று கேஎம்சிஹெச்அரங்கத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
புற்றுநோயை வென்றவர்கள், அவர்களின் பராமரிப்பாளர்கள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைப் பணியாளர்கள் இணைந்து நோயாளிகளின் மனஉறுதியைப் போற்றும் வகையில் இவ்விழா அமைந்தது.
“வாழ்வோம், வெல்வோம்!” என்ற இந்த ஆண்டின் முதன்மை கருப்பொருளை மையமாகக் கொண்டு, புற்றுநோய் கண்டறியப்பட்டாலே அது வாழ்வின் முடிவு என்ற தவறான எண்ணத்தைப் போக்குவதே இந்நிகழ்வின் முக்கிய நோக்கமாகும்.
ஆரம்பத்திலேயே நோயைக் கண்டறிதல், நவீன பரிசோதனை முறைகள் மற்றும் பக்கவிளைவுகள் குறைந்த சிகிச்சை முறைகள் மூலம் புற்றுநோயை முழுமையாகக் குணப்படுத்த முடியும் என்பதை மீண்டெழுந்தவர்களின் அனுபவங்களும் மருத்துவ விளக்கங்களும் தெளிவுபடுத்தின.
இவ்விழாவை கேஎம்சிஹெச் மருத்துவமனையின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான டாக்டர் நல்லா ஜி. பழனிசாமி அவர்கள் தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பிரபல பேச்சாளரும் ஆன்மீகச் சொற்பொழிவாளருமான சுகி சிவம் அவர்களின் சிறப்புரை அனைவரையும் உற்சாகப்படுத்தியது.
புற்றுநோயாளிகள் உதவிக் குழு உறுப்பினர்கள் கேஎம்சிஹெச் மருத்துவமனையுடன் இணைந்து உருவாக்கிய புற்றுநோயாளிகளின் அனுபவம் மற்றும் கேஎம்சிஹெச் புற்றுநோய் சிகிச்சை மையத்தில் உள்ள உலகத்தரமான சிகிச்சை வசதிகள் குறித்து விளக்கும் ஒரு வீடியோ படம் திரையிடப்பட்டது.
கேஎம்சிஹெச் மருத்துவமனை துணை தலைவர் காலஞ்சென்ற டாக்டர் தவமணி தேவி அவர்கள் நினைவாக, TAO தவமணி தேவி அட்வான்ஸ்டு ஆன்காலஜி இன்ஸ்டிடியூட்’ என்ற பெயரில் புதிய விரிவான புற்றுநோய் சிகிச்சை மையத்தை இந்த மருத்துவமனை சமீபத்தில் தொடங்கியுள்ளது. இந்த மையம் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை, நியூட்ரோபீனியா சிகிச்சை, இரத்தப் புற்றுநோய்க்கான CAR-T செல் மற்றும் BiTE சிகிச்சை போன்ற செல்லுலார் சிகிச்சைகள் உட்பட துல்லியமான புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வழங்குகிறது.
மேலும்,இதில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப அடிப்படையிலான ரேடியோதெரபி, MRI வழிகாட்டல் ரேடியோதெரபி மற்றும் மார்பகப் புற்றுநோய்க்கான கிரையோஅப்லேஷன் போன்ற நவீன வசதிகளும் இடம் பெற்றுள்ளன.
விழாவில் உரையாற்றிய டாக்டர் நல்ல ஜி.பழனிசாமி,
“இன்றைய சூழலில் புற்றுநோய் விழிப்புணர்வு மிகவும் அவசியமானது. பயத்தைப் போக்கி, சரியான விழிப்புணர்வுடன் செயல்பட வைப்பதே நமது ரோஸ் டே கொண்டாட்டத்தின் முக்கிய நோக்கமாகும். அதிநவீன, எளிதில் பெறக்கூடிய மற்றும் நம்பிக்கையான சிகிச்சைகளை வழங்கி, ஒவ்வொரு நோயாளியும் தைரியமாகப் போராடி தங்கள் வாழ்வை மீட்டெடுக்க கேஎம்சிஹெச் எப்போதும் உறுதுணையாக இருக்கும்” என்று கூறினார்.
தொடர்ந்து உரை நிகழ்த்திய கேஎம்சிஹெச் நிர்வாக இயக்குநர் டாக்டர் அருண் என். பழனிசாமி,
“புற்றுநோயை வெல்வதற்கு உலகத்தரம் வாய்ந்த மருத்துவ சிகிச்சையும் நவீன பரிசோதனை கருவிகளும் மட்டும் போதாது; நோயாளிக்கான மனரீதியான ஆதரவும் சமூக விழிப்புணர்வும் மிக அவசியம். பரிசோதனை முயற்சிகளை விரிவுபடுத்துவதன் மூலமும், நோயாளிகளுக்கு எளிதில் ஒத்துப்போகும் துல்லியமான சிகிச்சை முறைகளை வழங்குவதன் மூலமும், ஒவ்வொரு நோயாளியும் நம்பிக்கையுடனும் வசதியாகவும் சிகிச்சை பெறச் செய்வதே எங்கள் இலக்காகும். புற்றுநோய்க்குப் பிறகும் ஒரு சிறப்பான வாழ்க்கை உண்டு என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம்” என்று குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் புற்றுநோய் சிகிச்சை நிபுணர்கள், அறுவை சிகிச்சை மருத்துவர்கள், நோயாளிகள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் மருத்துவமனைப் பணியாளர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.