• Download mobile app
04 May 2024, SaturdayEdition - 3006
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குடும்ப பிரச்சனைகளை டிவி நிகழ்ச்சிகளில் விவாதிப்பது ஏற்புடையதா ?

December 24, 2016 பி.எம்.முஹம்மது ஆஷிக்

முன்பெல்லாம் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்படும் நிகழ்ச்சிகள் மக்களை மகிழ்விப்பதாகவும், சிந்திக்க வைப்பதாகவும் இருந்தது. ஆனால், இப்போ தெல்லாம் செண்டிமெண்ட், எமோஷனலை தூண்டிவிடும் ரியாலிட்டி ஷோக்களுக்கு தான் மவுசு அதிகம். இதிலும் குடும்பப் பிரச்சனைகளை தீர்த்து வைப்பது போன்ற நிகழ்சிகளை தான் சில தொலைகாட்சிகள் தற்போது நடத்தி வருகின்றன.

கணவன்-மனைவி தகராறு, வரதட்சணைப் பிரச்சனைகள், காதல், கள்ளக்காதல் விவகாரம், பாலியல் தொல்லை என்று பல்வேறு குடும்பப் பிரச்சனைகளை இதில் அலசி விவாதிக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிகளில் காரசார வாக்குவாதம், அழுகை, அடிதடி என்றெல்லாம் நடப்பதுண்டு. தமிழ் தொலைக்காட்சிகள் மட்டுமல்ல பிறமொழி தொலைக்காட்சிகளில் கூட இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றது. இதில் வேடிக்கையான விஷயமே சில முன்னணி நடிகைகள் இது போன்ற நிகழ்ச்சிகளில் நடுவராக அமர்ந்து நாட்டமைகளாக குடும்ப பிரச்சனைகளை தீர்த்து வைப்பது தான்.

குடும்ப நீதிமன்றங்களில் நடக்கும் விசயங்கள் கூட சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் சிலருக்குத்தான் தெரியும். நீதிபதிகளே குடும்ப விவாகாரத்தில் சட்ட வரையறைகளுக்குள் விவாதித்து, சேர்ந்து வாழத்தான் பெரும்பாலும் அறிவுறுத்துகின்றனர். உறவுகளை பிரிக்க, உடைக்க, விலக்கி வைக்க முயல்வதில்லை. ஆனால், சில டிவி சேனல்களில் இத்தகைய சமூகப் பிரச்சினைகள், முரண்பாடுகள், பிறழ்வுகள், முதலியவை அலசப்படும் போது, நிகழ்சிகளை பார்ப்பவர்களுக்கே முகம் சுளிக்கின்றனர். சில நேரங்களில் அத்தகைய நிகழ்ச்சிகளில் பங்கு கொள்பவர்கள் உண்மையில் பிரச்சனைகளை தீர்க்க வருகிறார்களா ? விளம்பரத்திற்காக வருகிறார்களா? அல்லது டிவி சேனல்களே “செட்டப்” செய்து தயாரித்து வருகின்றனரா போன்ற சந்தேகங்கள் பார்க்கும் மக்களுக்கு எழுகின்றன.

பிரச்சனை இல்லாத குடும்பம் இருக்க முடியாது. ஆனால் அவை எல்லையைக் கடக்கும் பொழுதுதான் பிரச்சனை பெரிய இடியாக அந்தக் குடும்பத்தை தாக்கி சின்னாபின்னமாக்கி விடுகின்றது.
குடும்பத்தில் உள்ள பெரியவர்களாலும், நீதிமன்றத்தாலும் தீர்த்து வைக்கமுடியாத பிரச்சனைகளையா டிவி நிகழ்ச்சிகள் தீர்த்து வைக்கப்போகிறது. இப்படி குடும்ப பிரச்சனைகளை டிவி நிகழ்ச்சிகளில் விவாதிப்பது ஏற்புடையதா ?

ரூபியா ஜூலியட் ( ஜவுளி துறை ஆராய்சியாளர்)

குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகள் குடும்பத்து பெரியவர்களே தீர்த்து வைக்க முடியும். இல்லாவிடில் காவல்நிலையம், நீதிமன்றம் உள்ளது. இதை விட்டு விட்டு இந்த விவகாரத்தை மீடியாவிற்கு கொண்டு சென்றால் நான்கு பேருக்கு தெரிந்த ஒரு விஷயம் நாளை உலகத்திற்கே தெரிந்து விடும். இதனால் குடும்ப பிரச்சனை பூகம்பாமாக வெடிக்குமே தவிர அதற்கு சரியான தீர்வு கிடைக்காது.

வைஷ்ணவி (கல்லூரி மாணவி )

குடும்பத்தில் ஒரு பிரச்சனை என்றால் குடும்பத்தில் உள்ள பெரியோர்களால் தீர்த்துக்கொள்ள வேண்டும். இதைவிட்டு வெளிப்படையாக பல லட்சக் கணக்கான மக்கள் பார்க்கும் தொலைக்காட்சியில் குடும்பத்தின் பிரச்சனைப்பற்றி விவாதிப்பது ஒரு ஆரோக்கியமான குடும்பத்திற்கு அழகல்ல. பிரச்சனையால் பல நாட்கள் பிரிந்து வாழும் சிலர் இந்த ஒரு மணிநேரத்தில் தொகுப்பாளர் பேசி சேர்த்து வைப்பது வேடிக்கையாக உள்ளது.

விக்னேஷ் ( ஐடி ஊழியர் )

முதலில் இது போன்ற நிகழ்ச்சிகளை தடை செய்ய வேண்டும். இதனால் யாருக்கும் எந்த பயனும் கிடையாது. தங்கள் குடும்பத்தைப் பற்றிய யாரும் தவறாக பேசக்கூடாது என்று நினைத்து தான் பலரும் வாழ்கின்றனர் . அப்படியிருக்க ஊரே இந்த நிகழ்ச்சியைப் பார்த்து பேசவது என்பது குடும்ப கெளரவத்தை இழக்கச் செய்யும். டிவி சேனல்கள் அவர்கள் டி.ஆர்.பி ரேட்டிங்கிற்காக இது போன்று மற்றவர்கள் குடும்பத்தை சீரழிப்பது ஏற்புடையதல்ல.

ஸ்ரீ சௌமியா (கல்லூரி மாணவி )

குடும்பத்தில் நடக்கும் சின்ன தவறுகளை மன்னிக்கலாம், மறைக்கலாம்னு நினைப்பவர்கள் கூட இது போன்ற நிகழ்ச்சிக்கு வந்தால் அவர்களது கோபம் மேலும் அதிகரிக்குமே தவறே குறையாது. ஒரு குடும்ப விஷயம் தொலைகாட்சியில் வந்து ஊரே பார்க்கும்பட்சத்தில் அது அவர்களை மட்டுல்ல அவர்களை சார்ந்திருக்கும் உறவினர்களுக்கு அவமானத்தை தேடித்தரும். நிகழ்ச்சிக்காக வேண்டுமானால் சேர்ந்துவிடுவார்கள். ஆனால், உணமையான வாழ்க்கை வாழ்வது கடினம். இது போன்ற நிகழ்ச்சிகளால் சேர்ந்த உறவுகள் குறைவே, பிரிந்த குடும்பங்கள் தான் அதிகம்.
சப்ரின் ஷா ( பத்திரிகையாளர் )

மீடியாங்குறது இந்த உலகத்துல என்ன நடக்குதுனு மக்களுக்கு சொல்லுறது தானே தவிர மக்களுடைய குடும்ப பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் தளம் கிடையாது. குடும்பத்துக்குள்ள பிரச்சனை இருந்தா அதை ஊரே பார்க்கின்ற மாதிரி நாம் சொல்லகூடாது. இந்த மாதிரியான பிரச்சனைகளை தீர்க்கவோ அல்லது அதிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவோ வழி சொல்லாமே தவிர இதுதான் தீர்வுனு சொல்லகூடிய அளவிற்கு ஒரு குடும்ப விசயத்திற்குள் மீடியா செல்வது சரியானதாக இருக்காது. பெண் ஆகட்டும் ஆண் ஆகட்டும் யாராக இருந்தாலும் கேமரா முன்னாள் எல்லாவற்றையும் சொல்லும் போது அவர்களுடைய மரியாதையை இழக்க நேரிடும். தீர்வுகளுக்கான வழிகளை தெரிஞ்சுக்க உதவலாம், ஆனால், இதுதான் தீர்வுனு கோடி கணக்கான பேர் முன்னாடி சொல்லுறது ஏற்றுகொள்ள கூடிய விஷயம் அல்ல.

இப்ராஹிம் (வர்த்தக ஒருங்கிணைப்பாளர்)

குடும்ப பிரச்சனைகளில் மூன்றாவதாக ஒரு நபர் வந்தாலே அங்கே குழப்பம்தான் மிஞ்சும். அப்படி இருக்கையில் இவைகளை மீடியாக்கள் விவாதிப்பதால் எந்த நன்மையும் விளையப்போவது இல்லை. இதனால் பயனடைவது மீடியாக்கள் மட்டுமே. தங்கள் டிஆர்பி யை ஏற்றிக் கொள்ளலாம். இதில் கலந்து கொண்டவர்களில் எவருக்காவது தீர்வு கிடைத்திருக்குமா ? என விசாரித்தால் நிச்சயம் இருக்காது. இதில் கலந்து கொள்பவர்கள் பெரும்பாலும் அடித்தட்டு மக்களே. என்ன ஆசைகாட்டி அவர்களை அழைத்து வருகிறார்கள் என தெரியவில்லை.

நான்கு பேர் முன்னிலையில் பேசினாலே மானம் போகும் என்ற ரீதியில் இருக்கும் விஷயங்களை டிவியில் காண்பித்து தங்கள் குடும்ப கெளரவத்தை தாங்களே இழக்கின்றனர். அப்படி ஒரு நிகழ்ச்சியில் ஏற்பட்ட அவமானத்தால் சமீபத்தில் கூட ஒருவர் தற்கொலை கூட செய்தது உண்டு. தொழில் முறை உளவில் ஆலோசனை என்பது சிகிச்சை பெறுபவருக்கும் உளவியல் நிபுணருக்கு மத்தியில் தான் நடக்கும். கேமரா முன்பு நடக்காது. இது போன்ற நிகழ்ச்சிகள் பற்றி விழிப்புணர்வு கொண்டு வரவேண்டும் என்பதே பலதரப்பட்ட மக்களின் கருத்தாக உள்ளது.

மேலும் படிக்க