June 7, 2026
தண்டோரா குழு
இந்தியாவின் கடல்சார் கண்டுபிடிப்புத் துறையில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில், குமரகுரு கல்வி நிறுவன மாணவர்கள் வடிவமைத்து உருவாக்கிய இந்தியாவின் முதல் மனித சக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் அடுத்த தலைமுறை மின்சார பந்தயப் படகு அறிமுகம் செய்யப்பட்டது.
கோவை குமரகுரு வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்திய கடற்படையின் INS Agrani செயல் அதிகாரி கேப்டன் பிரதீப் பிரேம்குமார்மற்றும் 6th Element Engineering நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் இயக்குநர் Craig Mario D’Mello ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு இந்த கண்டுபிடிப்புகளை அறிமுகம் செய்து வைத்தனர்.
குமரகுரு கல்வி நிறுவனங்களின் ‘யாலி 1.0’ திட்டத்தின் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி, மாணவர்களின் தொழில்நுட்ப திறன் மற்றும் புதுமை சிந்தனையை உலக அரங்கில் எடுத்துச் செல்லும் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
மாணவர்களின் ‘டீம் இன்கிராஃப்ட்’ உருவாக்கிய மனித சக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல், இந்தியாவில் மாணவர்களால் உருவாக்கப்பட்ட முதல் நீர்மூழ்கிக் கப்பல் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.இந்த அணியினர், இங்கிலாந்தில் ஜூன் 29 முதல் ஜூலை 10, 2026 வரை நடைபெறவுள்ள European International Submarine Races சர்வதேச நீர்மூழ்கிக் கப்பல் பந்தயத்தில் இந்தியா சார்பில் பங்கேற்க உள்ளனர்.
உலகின் முன்னணி பல்கலைக்கழக மாணவர் அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டியில், மோட்டார் இல்லாத நீர்மூழ்கிக் கப்பலை மனித சக்தியால் இயக்கி, நீருக்கடியில் அமைக்கப்பட்ட சவாலான பாதையை குறித்த நேரத்திற்குள் கடந்து திறமையை நிரூபிக்க வேண்டும்.
இந்த சர்வதேச போட்டிக்காக இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே கல்வி நிறுவனம் குமரகுரு கல்வி நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், மாணவர்கள் உருவாக்கிய மின்சார பந்தயப் படகும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்கத் தயாராகி வருவதால், இந்தியாவின் கடல்சார் தொழில்நுட்ப மற்றும் புதுமைத் திறனை உலக அரங்கில் வெளிப்படுத்தும் முக்கிய வாய்ப்பாக இது அமையவுள்ளது.