July 19, 2026
தண்டோரா குழு
கோயம்புத்தூர் கரும்புக்கடையில் உள்ள மஸ்ஜித் இஹ்ஸான் பள்ளிவாசலில் இன்று மத நல்லிணக்க கலந்துரையாடல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. நல்லாயன் குருகுல கல்வி நிறுவனத்தின் 13-ஆம் ஆண்டு மாணவர்கள், தங்களது பாதிரியார் பணிக்கு முந்தைய களப்பயணத்தின் ஒரு பகுதியாக இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் (JIH) மாவட்டத் தலைவர் பி.எஸ்.உமர் பாரூக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை, மாவட்டச் செயலாளர் அப்துல் ஹக்கீம் ஒருங்கிணைத்து வழிநடத்தினார்.
நிகழ்வில் மஸ்ஜித் இஹ்ஸான் தலைமை இமாம் மௌலவி முஹம்மத் இஸ்மாயில் இந்தாதி அவர்கள்,இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகள்,மனிதநேயம்,சகோதரத்துவம் மற்றும் மத நல்லிணக்கத்தின் அவசியம் குறித்து விரிவாக உரையாற்றினார்.
பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களிடையே பரஸ்பர புரிதலையும்,ஒற்றுமையையும் வளர்க்கும் விதமாக அமைந்த இந்த நிகழ்வின் நிறைவில் பங்கேற்ற அனைவருக்கும் இஸ்லாமிய நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. இதில் சாலிடாரிட்டி, SIO நிர்வாகிகள் மற்றும் மஸ்ஜித் இஹ்ஸான் பள்ளிவாசல் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.