July 17, 2026
தண்டோரா குழு
உலகக் கால்பந்தின் ஒற்றுமை உணர்வை போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுடன் இணைத்து, கோவையில் உள்ள கேம்ஃபோர்டு சர்வதேசப் பள்ளி மாணவர்கள் வித்தியாசமான நிகழ்ச்சியை நடத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர்.
FIFA உலகக் கோப்பை 2026 இறுதிப் போட்டியை முன்னிட்டு,பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த 10 அடி உயர பிரம்மாண்ட கால்பந்து அமைப்பை மையமாகக் கொண்டு, உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்ற 48 நாடுகளின் தேசியக் கொடிகளை ஏந்தியபடி மாணவ, மாணவியர் ஒன்று திரண்டனர்.
உலகம் முழுவதும் விளையாட்டு ஏற்படுத்தும் ஒற்றுமையை வெளிப்படுத்திய இந்த நிகழ்ச்சி, போதைப்பொருள் ஒழிப்புக்கான வலுவான விழிப்புணர்வு பிரச்சாரமாக அமைந்தது.”இலக்குகளைத் தேர்ந்தெடுங்கள்… போதைப்பொருட்களை அல்ல!” என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்த நிகழ்வில், இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகாமல், விளையாட்டு, கல்வி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைத் தேர்வு செய்ய வேண்டும் என்ற முக்கியமான செய்தி வலியுறுத்தப்பட்டது.
மேலும்,உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மோதவுள்ள இரு அணிகளுக்கும் மாணவர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன்,விளையாட்டில் வெற்றி பெற அவசியமான ஒழுக்கம், விடாமுயற்சி, உறுதிப்பாடு,குழுப்பணி மற்றும் தன்னம்பிக்கை போன்ற உயரிய பண்புகளையும் கொண்டாடினர்.
இந்த முன்னெடுப்பின் மூலம், மாணவர்களிடையே நேர்மறையான வாழ்க்கைத் தேர்வுகள், உடல்நலம், குழுப்பணி மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வளர்க்க விளையாட்டு ஒரு சக்திவாய்ந்த கருவி என்பதை கேம்ஃபோர்டு சர்வதேசப் பள்ளி மீண்டும் ஒருமுறை எடுத்துக்காட்டியது.
நிகழ்ச்சியில் பள்ளியின் தலைவர் என். அருள் ரமேஷ் மற்றும் தாளாளர் பூங்கோதை அருள் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு, இளைஞர்கள் உயரிய இலக்குகளை நோக்கி பயணிக்க வேண்டியதன் அவசியத்தையும், போதைப்பொருள் துஷ்பிரயோகத்தின் ஆபத்துகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த 10 அடி உயர பிரம்மாண்ட கால்பந்து பெற்றோர்களின் பார்வைக்காக இரண்டு நாட்கள் வைக்கப்பட உள்ளது.அதைபோல் பெற்றோரும் கால்பந்து விளையாடி சான்றிதழ் பெற ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.