May 3, 2021
தண்டோரா குழு
கோவை தெற்கு தொகுதியில் பதிவான வாக்குகளை மறு எண்ணிக்கை செய்ய கோரி அந்த தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்து முடிந்து அனைத்து தொகுதிகளிலும் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் தமிழகத்தில் ஸ்டார் அந்தஸ்து பெற்ற தொகுதியான கோவை தெற்கு தொகுதியில் ம.நீ.ம.தலைவர் கமல்ஹாசன், பா.ஜ.க.சார்பாக வானதி சீனிவாசன், தி.மு.க. கூட்டணி சார்பாக காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் உட்பட 10 க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இந்நிலையில் நேற்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, கமல்ஹாசனை விட 1728 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க.வேட்பாளர் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில்,ஹிந்துஸ்தான் ஜனதா கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் ராகுல் காந்தி என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில்,பா.ஜ.க வானதி சீனிவாசன் வெற்றியில் சந்தேகம் இருப்பதாகவும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்க வேண்டும் எனவும் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும் எனவும் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
தமிழகத்தில் ஸ்டார் அந்தஸ்து பெற்ற தொகுதியாக கூறப்பட்ட கோவை தெற்கு தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும் என அங்கு போட்டியிட்ட வேட்பாளர் மனு அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.