May 14, 2026
தண்டோரா குழு
கோவை ராம்நகர் பகுதியில் உள்ள இந்து முன்னணி அலுவலகத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர்களைச் சந்தித்து பல்வேறு அரசியல் கருத்துகளை வெளியிட்டார்.
அப்போது பேசிய அவர்,உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து சனாதனத்திற்கு எதிராக கருத்து தெரிவித்து வருவதாக குற்றம்சாட்டி, இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசி வருவதாகக் கூறினார். ஏற்கனவே ஜாமீனில் உள்ள நிலையில், இத்தகைய கருத்துக்கள் மூலம் இந்து வாக்குகளை அவர் இழந்து வருவதாகவும் விமர்சித்தார்.
மேலும்,உதயநிதி பேச்சைக் கண்டித்து வரும் 17ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்தார்.புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய்க்கு வாழ்த்துகளைத் தெரிவித்த அவர், மத பாகுபாடு இல்லாமல் அரசு செயல்படும் என்ற அவரது உறுதிமொழியை வரவேற்றதாகக் கூறினார்.டாஸ்மாக் கடைகளைக் குறைக்கும் நடவடிக்கைகளுக்கும் பாராட்டு தெரிவித்தார்.
முன்னாள் அரசு இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்காத சூழலை சுட்டிக்காட்டிய அவர்,கடவுள் நம்பிக்கை கொண்டவரான ஜோசப் விஜய் அனைத்து இந்து பண்டிகைகளுக்கும் பாகுபாடின்றி வாழ்த்து தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.சபாநாயகர் தனது உரையில் பைபிள் வாசகங்களுடன் பகவத் கீதை மற்றும் குர்ஆன் வாசகங்களையும் குறிப்பிட்டிருப்பது சமநிலையான அணுகுமுறை எனவும் அவர் கூறினார்.
ஜோசப் விஜய் தலைமையிலான ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து கருத்து தெரிவித்த அவர், ஆறு மாதங்களுக்குப் பிறகே அரசின் முழுமையான செயல்பாடுகள் தெரியவரும் என்றார். தனது ஜோதிடரை அரசு பதவியில் நியமித்த முடிவை விஜய் திரும்பப் பெறத் தேவையில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவை மட்டும் நம்பினால் ஓராண்டு கூட ஆட்சி நீடிக்காது எனவும் விமர்சித்தார்.மக்கள் மாற்றத்தை விரும்பி விஜய்க்கு வாக்களித்துள்ளதாகவும், அவரது கட்சியினர் பணம் கொடுக்காமல் வெற்றி பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மத்திய அரசுடன் சுமுகமான உறவை விஜய் பேண வேண்டும் என வலியுறுத்திய காடேஸ்வரா சுப்பிரமணியம், விஜய் குறித்து முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பதிலளிக்கையில்,“விஜய் ஆர்.எஸ்.எஸ் வளர்ப்பாக இருந்தால், திருமாவளவன் ஏன் அவருக்கு ஆதரவு அளிக்க வேண்டும்?” என்ற கேள்வியையும் எழுப்பினார்.
இறுதியாக,அண்ணாமலை மீண்டும் பாஜக தலைவராகவோ அல்லது மத்திய அமைச்சராகவோ வர வாய்ப்பு உள்ளதாகவும்,தமிழகத்தில் பாஜக இன்னும் தீவிரமாக களப்பணியாற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.