May 13, 2026
தண்டோரா குழு
மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கையில் நீட் தேர்வு முறையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நீட் தேர்வு அறிமுகமான காலம் முதலே தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. மேலும், மருத்துவ மாணவர் சேர்க்கையை 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாநில அரசுகளே நிரப்ப அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, அந்தத் தேர்வை தேசியத் தேர்வு முகமை ரத்து செய்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், நீட் தேர்வு காரணமாக கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்கள், ஏழை மற்றும் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள், தமிழ்வழியில் கல்வி பயிலும் மாணவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.எனவே, சமூகநீதி மற்றும் சம வாய்ப்பை உறுதி செய்யும் வகையில் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார்.