April 30, 2021
தண்டோரா குழு
கொரோனா இரண்டாவது அலையில் இருந்து சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பாதுகாக்கப்பட மற்றும் மீண்டு எழ வங்கிகளில் 6 மாத கால கடன் விடுப்புக் காலம் அளிக்கப்பட வேண்டும் என மத்திய அரசுக்கு கொடிசியா கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து கொடிசியா தலைவர் ரமேஷ் பாபு கூறியிருப்பதாவது:
கொரோனா இரண்டாவது அலையால் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மறைமுகமாக பாதிக்கப்பட்டு உள்ளதோடு, எதிர்வரும் 6 மாதங்களில் உற்பத்தி சார்ந்த செயல்பாடுகள் வெகுவாக குறைய வாய்ப்புகள் உள்ளன. இந்தியா முழுவதும் உள்ள சிறு குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளின் உற்பத்தி, போக்குவரத்து உள்ளிட்ட பல செயல்பாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும் விற்பனையும் நேரடியாக பாதிக்கப்பட்டு, நிதி பற்றாக்குறைக்கு வழிவகுத்திருக்கிறது. வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய தொகையை சரியாக செலுத்த இயலாமல் போவதற்கும் இது காரணமாக அமைகிறது. இந்த கடுமையான நிதி பற்றாக் குறைக்கு இன்னொரு காரணம், மூலப்பொருட்களின் 70 சதவீதம் வரையிலான அசாதாரண விலை உயர்வு ஆகும்.
சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பாதுகாக்கப்பட, தொழிற்சாலைகள் செலுத்த வேண்டிய கடன் தொகைகள் மற்றும் அதற்கான வட்டி தொகை ஆகியவற்றுக்கு 6 மாத கால கடன் விடுப்புக் காலம் அளிக்கப்பட வேண்டும். ஏற்கனவே 20சதவீதம் கடன் வழங்கிய திட்டத்தின் கீழ் மேலும் 20 சதவீதம் கடன் வழங்க வேண்டும். தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபடும் வகையில் இந்த கூடுதல் கடன் தொகையை திருப்பி செலுத்தும் காலத்தை 6 ஆண்டுகளாக நிர்ணயிக்க வேண்டும்.
தற்போது உள்ள சூழலை கவனத்தில் கொண்டு இயங்காச் சொத்து நடைமுறைகள் குறித்த தளர்வுகள் மார்ச் 31ம் தேதி 2022ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட வேண்டும்.வங்கிகளிடமிருந்து சிறு குறு நடுத்தர தொழிற்சாலைகள் கடன் தொகையை செலுத்துமாறு கடுமையான அழுத்தம் தரப்படுகிறது. சிறு குறு நடுத்தர தொழிற்சாலைகளின் பண புழக்கமும், வணிகமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த சிக்கலான சூழ்நிலையில் மத்திய நிதியமைச்சர் தலையிட்டு சிறு குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளுக்கு வங்கிகள் அளிக்கும் நெருக்கடியை தடுத்து உதவ வேண்டும். எங்களது இந்த கோரிக்கைகளை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.
இவ்வாறு ரமேஷ் பாபு கூறியுள்ளார்.