February 22, 2021
தண்டோரா குழு
பட்டா பெயர் மாற்றத்திற்கு லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரை தொடர்ந்து கோவை மாநகராட்சி நில அளவையர் பணியிடை நீக்கம் செய்து உதவி இயக்குனர் உத்தரவிட்டார்.
கோவை ஒண்டிபுதூரை சேர்ந்தவர் நாகராஜ் (62). இவர் புதிதாக வாங்கிய வீட்டு மனையின் பெயரை மாற்றுவதற்காக கோவை சிங்காநல்லூரில் உள்ள மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தை அணுகினார். இதுதொடர்பான கோப்புகள் நில அளவையர் நிர்மல்குமார் (40) என்பவரிடம் இருந்துள்ளது. வீட்டுமனை பட்டா பெயர் மாற்றம் தொடர்பாக நாகராஜ் அவரை தொடர்பு கொண்டு உள்ளார்.
அப்போது நில அளவையர் நிர்மல்குமார், நாகராஜிடம் அங்குள்ள நடராஜன் என்பவரை சந்திக்கும்படி கூறியுள்ளார்.
அதன்படி நடராஜனை அவர் சந்தித்து உள்ளார். அப்போது நடராஜ் வீட்டு மனைப்பட்டா பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் ரூ.6 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த நாகராஜ் கோவை லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு கணேசன் மற்றும் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். உடனே போலீசார் ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை நாகராஜிடம் வழங்கினர்.
இந்த ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொண்ட நாகராஜ் கடந்த 11ம் தேதி நில அளவையர் நிர்மல் குமாரை சந்தித்து ரூ.6 ஆயிரம் கொடுக்க சென்றார்.அப்போது அவர் தன்னிடம் வழங்க வேண்டாம்,நடராஜிடம் வழங்கும்படி கூறியுள்ளார்.ஆனால் நடராஜும் அந்த பணத்தை வாங்காமல் பிரதீப்குமார் என்ற வாலிபரிடம் வழங்கும்படி தெரிவித்து உள்ளார். இதையடுத்து அந்த வாலிபரிடம், நாகராஜ் ரூ.6 ஆயிரத்தை வழங்கிய போது லஞ்ச ஒழிப்பு போலீசார் பிரதீப்குமாரை கைது செய்தனர்.
அந்த வாலிபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் ஆனைமலை பகுதியை சேர்ந்தவர் என்றும், நீண்ட காலமாக நில அளவையருக்கு லஞ்சம் பணம் வாங்கி கொடுத்து வந்ததாகவும் தெரிவித்து உள்ளார். இதையடுத்து நிலஅளவையர் நிர்மல்குமார், நடராஜன், பிரதீப்குமார் ஆகிய 3 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் மாவட்ட நிலஅளவை உதவி இயக்குனர், கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல நில அளவையர் நிர்மல்குமாரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். அவருக்கு பதிலாக கோவை வடக்கு மண்டல நிலஅளவையருக்கு கூடுதலாக பொறுப்பு வழங்கி கிழக்கு மண்டல நில அளவையராக நியமித்து உத்தரவிட்டார்.