September 15, 2026
தண்டோரா குழு
இருதய குறைபாடுகள் மற்றும் குழந்தைப் பருவ புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் வகையில், GKNM மருத்துவமனை சார்பில் நடத்தப்படும் ‘Run for Little Hearts’ மாரத்தான் 4-வது பதிப்பு வரும் செப்டம்பர் 27-ம் தேதி கோவையில் நடைபெற உள்ளது.
குழந்தைப் பருவ புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் மற்றும் உலக இருதய தினத்தை முன்னிட்டு நடைபெறும் இந்த மேரத்தான், பாப்பநாயக்கன்பாளையம் மணி மேல்நிலைப் பள்ளியில் காலை 5.30 மணிக்கு தொடங்குகிறது.இதில் 1 கி.மீ., 3 கி.மீ., 5 கி.மீ. மற்றும் 10 கி.மீ. என பல்வேறு பிரிவுகளில் ஓட்டப்பந்தயம் நடைபெறுகிறது. 5 மற்றும் 10 கி.மீ. பிரிவுகளில் வெற்றி பெறுபவர்களுக்கு மொத்தம் ரூ.80 ஆயிரம் மதிப்பிலான ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
கோவை மாவட்ட தடகள சங்கத்தின் அங்கீகாரத்துடன் நடைபெறும் இந்த மேரத்தானுக்கு LMW,லட்சுமி மில்ஸ், லட்சுமி கார்டு குளோதிங், ப்ளூ டாலியா, பிரீமியர் ஃபைன் லினன்ஸ், LEED, பிரிகாட் உள்ளிட்ட நிறுவனங்கள் ஆதரவு அளிக்கின்றன. சோடெக்ஸோ நிகழ்வின் உபசரிப்பு பங்காளராக உள்ளது.
மாரத்தானுக்கான டி-ஷர்ட் மற்றும் பதக்கம் அறிமுக விழா செப்டம்பர் 15-ம் தேதி GKNM மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய GKNM மருத்துவமனை முதன்மை நிர்வாக அதிகாரி டாக்டர் ரகுபதி வேலுசாமி, கடந்த ஆண்டு நடைபெற்ற மேரத்தானில் சுமார் 3,000 பேர் பங்கேற்றதாகவும், திரட்டப்பட்ட நிதி மூலம் இருதய குறைபாடு மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 42 குழந்தைகள் பயனடைந்ததாகவும் தெரிவித்தார்.
மேலும்,GKNM மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்த குழந்தைகளும் தொடர்ந்து இந்த மேரத்தானில் பங்கேற்று வருவதாகவும், குழந்தைகள் இருதய சிகிச்சை மற்றும் குழந்தைப் புற்றுநோயியல் துறைகளில் மேம்பட்ட தொழில்நுட்ப வசதிகளுடன் மருத்துவமனை செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.