August 27, 2026
தண்டோரா குழு
கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில், வெறும் 1.7 கிலோ எடையுடன், 33 வாரங்களில் பிறந்த குறைமாத பெண் குழந்தைக்கு சிக்கலான இருதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.மேற்கு தமிழகத்தில் குழந்தைகளுக்கான இருதய சிகிச்சைத் துறையில் இது ஒரு முக்கிய மருத்துவ சாதனையாகக் கருதப்படுகிறது.
இரட்டைக் குழந்தைகளில் ஒன்றான இந்தப் பெண் குழந்தை, பிறப்பதற்கு முன்பே தீவிரமான பிறவி இருதயக் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. கோவை கேஎம்சி.ஹெச் மருத்துவமனையிலேயே சிசேரியன் மூலம் பிறந்த சில நாட்களில் குழந்தையின் உடலில் ஆக்சிஜன் அளவு படிப்படியாகக் குறைந்ததால், உயிரைக் காப்பாற்ற அவசரமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. மிகக் குறைந்த எடை மற்றும் குறைமாதப் பிறப்பு காரணமாக அறுவை சிகிச்சை மிகவும் சவாலானதாக இருந்தது.
இந்த சிகிச்சையில் ஒவ்வொரு கட்டத்திலும் மிகுந்த துல்லியம் தேவைப்பட்டது. அறுவை சிகிச்சை சுமார் 8 மணி நேரம் நடைபெற்றது. இதில் 233 நிமிடங்கள் இருதயம் மற்றும் நுரையீரலின் செயல்பாட்டை இயந்திரம் மூலம் மேற்கொள்ளும் ‘கார்டியோபல்மனரி பைபாஸ்’ உதவியும், 130 நிமிடங்கள் இருதயத்தை நிறுத்தி சிகிச்சை மேற்கொள்ளும் நடைமுறையும் இடம்பெற்றன.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு குழந்தை நலமுடன் குணமடைந்து வருகிறது. தற்போது குழந்தை சுறுசுறுப்பாக இருப்பதுடன், உணவையும் நன்றாக எடுத்துக்கொள்கிறது. விரைவில் குழந்தை மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அனுப்பப்பட உள்ளது. பெற்றோர் அறுவை சிகிச்சைக்கு சம்மதித்திருந்தாலும், சிகிச்சைக்கான செலவை ஏற்கும் நிலையில் அவர்கள் இல்லை. குழந்தையின் நிலையை கருத்தில் கொண்டு, கேஎம்சிஹெச் மருத்துவமனை நிர்வாகம் மனிதாபிமான அடிப்படையில் அறுவை சிகிச்சைக்கு அனுமதி அளித்ததுடன், சிகிச்சைக்கான முழுச் செலவையும் மருத்துவமனையே ஏற்றுக்கொண்டது.
இந்த வெற்றிகரமான சிகிச்சைக்காக கேஎம்சிஹெச் தலைவர் டாக்டர் நல்லா ஜி. பழனிசாமி, கூறுகையில்
“கேஎம்சிஹெச் மருத்துவக் குழுவினரின் திறமை, நவீன மருத்துவ வசதிகள் மற்றும் பல்துறை மருத்துவர்களின் ஒருங்கிணைந்த செயல்பாட்டை இந்த சாதனை வெளிப்படுத்துகிறது. இந்த சிகிச்சையில் பங்கேற்ற டாக்டர் கே.எஸ். முர்த்தி தலைமை வகித்தார். அவருடன் இருதய நோய் நிபுணர் டாக்டர் வினோத் துரைசுவாமி, தீவிர சிகிச்சை நிபுணர் டாக்டர் வினோத் குமார், அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கண்ணன், மயக்கவியல் நிபுணர்கள் டாக்டர் ரமேஷ், டாக்டர் கப்பியன், டாக்டர் ரமீஸ், குழந்தைகள் நல மருத்துவர்கள் டாக்டர் சீனிவாசன், டாக்டர் பாலகிருஷ்ணன், டாக்டர் அபிராமலதா மற்றும் பெர்ஃபியூஷனிஸ்ட் திருமதி திலகவதி ஆகியோர் அடங்கிய பல்துறை மருத்துவக் குழுவினருக்கு பாராட்டு தெரிவித்தார்.
கேஎம்சிஹெச். நிர்வாக இயக்குநர் டாக்டர் அருண் பழனிசாமி கூறுகையில்:
“குழந்தையின் உயிரைக் காப்பாற்ற அறுவை சிகிச்சை மட்டுமே வழி என்று மருத்துவக் குழுவினர் தெரிவித்தபோது, பொருளாதாரக் காரணங்களால் சிகிச்சை தடைபடக் கூடாது என்பதில் நாங்கள் தெளிவாக இருந்தோம். அதனால் அறுவை சிகிச்சைக்கான முழுச் செலவையும் மருத்துவமனை ஏற்றுக்கொண்டது. குழந்தை வெற்றிகரமாக குணமடைந்து வருவது கேஎம்சிஹெச். குடும்பம் முழுவதற்கும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த சாதனையை சாத்தியமாக்கிய டாக்டர் முர்த்தி மற்றும் அனைத்து மருத்துவக் குழுவினருக்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.”
‘’நாடு முழுவதும் இதேபோன்ற நிலையில் உயிர் பிழைத்த குழந்தைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்றும் மேற்கு தமிழகத்தைப் பொறுத்தவரை, இது குழந்தைகளுக்கான இருதய சிகிச்சையில் ஒரு முக்கிய மருத்துவ சாதனை’’ என்றும் கேஎம்சிஹெச் குழந்தைகள் இருதய அறுவை சிகிச்சைத் துறை மூத்த ஆலோசகர் டாக்டர் கே.எஸ். முர்த்தி தெரிவித்தார்.
உயிர் காக்கும் சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கும், சிகிச்சைக்கான முழுச் செலவையும் ஏற்ற மருத்துவமனை நிர்வாகத்திற்கும் குழந்தையின் பெற்றோர் தங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர். பல மருத்துவமனைகளில் முயற்சித்தும் பலனில்லாத நிலையில், கேஎம்சிஹெச் மருத்துவமனை மட்டுமே தங்கள் குழந்தைக்குத் தேவையான அவசர சிகிச்சையையும் நிதி உதவியையும் வழங்கி உதவியதாக அவர்கள் குறிப்பிட்டனர்.