August 12, 2026
தண்டோரா குழு
கோவையில் உள்ள பிரபல தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதனின் திடீர் உயிரிழப்பு குறித்து,கல்லூரி நிர்வாகம் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்துள்ளது.
கோவை ஹிந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மெகாட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படித்து வந்த மாணவர் அமுதன், விடுதி சமையல்காரருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் டாக்டர் ஜெ.ஜெயா மற்றும் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவினர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
கடந்த ஜூலை 21-ஆம் தேதி இரவு 11:30 மணியளவில், விடுதியில் தங்கியிருந்த மாணவர்களான அமுதன் மற்றும் அஜீஷ் ஆகியோர் கல்லூரி வளாகத்திற்கு வெளியே வந்துள்ளனர். அப்போது விடுதி சமையல்காரரான மனோஜ்,’ஏன் இந்த நேரத்தில் வெளியே வருகிறீர்கள்?’ எனக் கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் சமையல்காரர் தாக்கப்பட்டு, காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சமையல்காரர்கள் பணிப்புறக்கணிப்பு செய்யப் போவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, மாணவர்களின் எதிர்காலத்தையும் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரணை நடத்தியது.விசாரணையில் மாணவர்கள் தவறை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, ஜூலை 24 அன்று அவர்கள் இடைநீக்கம் (Suspension) செய்யப்பட்டு, பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.
கல்லூரி வளாகத்திற்குள் போதைப்பொருள் புழக்கம் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளை நிர்வாகம் முற்றிலுமாக மறுத்துள்ளது.தாக்குதல் நடத்தியதற்காக மட்டுமே மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும்,போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக எந்த விசாரணையும் நடைபெறவில்லை என்றும் நிர்வாகம் தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, ஆகஸ்ட் 11-ஆம் தேதி மீண்டும் வந்து சந்திக்குமாறு பெற்றோர்களிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆகஸ்ட் 10 அன்று மாலையில் அமுதன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்ததாகத் தகவல் கிடைத்தது. காவல் துறை கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், சந்தேகத்திற்குரிய பிற மாணவர்களின் விவரங்களும் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்பட்டு வருவதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.