July 27, 2026
தண்டோரா குழு
உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கி ஜூன் 30, 2026-ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டிற்கான தனது நிதிச் செயல்பாட்டு முடிவுகளை அறிவித்துள்ளது.இதில் இவ்வங்கியின் வரிக்கு பிந்தைய லாபம் ரூ.317 கோடியாக உயர்ந்துள்ளது.
இந்த சாதனை குறித்து உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கியின் செயல் இயக்குனர் கரோல் புர்டாடோ கூறுகையில்,
“தற்போதைய உலகளாவிய சந்தைகளில் நிலையற்ற தன்மைகள் இருந்தபோதிலும், உள்நாட்டுப் பொருளாதாரக் குறியீடுகள் நிலையான வளர்ச்சியைக் காட்டுகின்றன. இந்திய ரிசர்வ் வங்கி தனது ரெப்போ விகிதத்தை எந்த மாற்றமும் இன்றி 5.25% ஆக வைத்துள்ளது.
2027-ம் நிதியாண்டிற்கான திருத்தப்பட்ட உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.6% ஆக இருக்கும் என கணித்துள்ளது. மேலும், முழு ஆண்டிற்கான பணவீக்கம் 5.1% என்ற வரையறுக்கப்பட்ட வரம்பிற்குள் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. சிறப்பான கடன் தேவை மற்றும் நிலையான வைப்புநிதிகளுடன் இந்திய வங்கித்துறை தொடர்ந்து வலுவாக உள்ளதையும் ரிசர்வ் வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
வங்கி அதன் கிளைகளை விரிவுபடுத்துவதோடு, இந்த காலாண்டிலும் பன்முகப்படுத்தப்பட்ட வணிக வளர்ச்சியை அடைந்துள்ளது.ஜூன் 2026 நிலவரப்படி கிளைகளின் எண்ணிக்கை 814 ஆக உயர்ந்துள்ளது. வைப்புநிதிகள் முந்தைய ஆண்டை விட 24.6 சதவீதமும், முந்தைய காலாண்டை விட 5.4 சதவீதமும் அதிகரித்து ரூ.48,129 கோடியாக உள்ளது.
அதேபோல், மொத்த கடன் புத்தகம் முந்தைய ஆண்டை விட 28.9 சதவீதமும், முந்தைய காலாண்டை விட 5.5 சதவீதமும் வளர்ச்சி கண்டு ரூ.42,903 கோடியை எட்டியுள்ளது.” என்று தெரிவித்தார். நடப்பு மற்றும் சேமிப்பு கணக்கு வைப்புநிதிகள் முந்தைய ஆண்டை விட 37.8 சதவீதம் அதிகரித்து ரூ.12,930 கோடியாக உள்ளது.2027-ம் நிதியாண்டின் முதல் காலாண்டில், பாதுகாக்கப்பட்ட கடன்களின் வளர்ச்சி சிறப்பாக இருந்தது. இது முந்தைய ஆண்டை விட 42.7 சதவீதமும், முந்தைய காலாண்டை விட 7.8 சதவீதமும் அதிகரித்து ரூ.21,638 கோடியை எட்டியுள்ளது.
மொத்த கடன் புத்தகத்தில் இதன் பங்கு 50.4 சதவீதமாக உள்ளது.இந்த காலாண்டில் கடன் வழங்கல் முந்தைய ஆண்டை விட 41.4 சதவீதம் அதிகரித்து ரூ.9,245 கோடியாக உள்ளது.வாகனக் கடன் மற்றும் தங்கக் கடன் ஆகிய இரண்டும் தலா ரூ.1,000 கோடியை கடந்துள்ளன.வீட்டுக் கடன்கள் மற்றும் சிறு அடமானக் கடன்களை உள்ளடக்கிய வீட்டுக் கடன் பிரிவு 40.8 சதவீதமாக வளர்ச்சி கண்டு ரூ.11,210 கோடியாகவும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் கடன்கள் 54 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.3,470 கோடியாகவும் உள்ளது.
வரிக்கு பிந்தைய லாபம் முந்தைய ஆண்டை விட 206.7 சதவீதம் அதிகரித்து ரூ.317 கோடியாக உள்ளது. சொத்துக்கள் மீதான வருமானம் முந்தைய ஆண்டை விட 131 பிபிஎஸ் அதிகரித்து 2.2 சதவீதமாகவும், பங்கு மூலதனம் மீதான வருமானம் 1,145 bps அதிகரித்து 18.2 சதவீதமாகவும் உள்ளன. கிளை விரிவாக்கம், பிராண்டிங் முயற்சிகள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் பகுப்பாய்வு திறன்கள் போன்ற எதிர்காலத் தேவைகளை உருவாக்குவதற்கான முதலீடுகள் முதல் காலாண்டின் இறுதியில் துரிதப்படுத்தப்பட்டு உள்ளதாக இவ்வங்கி தெரிவித்துள்ளது.