July 16, 2026
தண்டோரா குழு
கிராப்ட் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் கைவினைப் பொருட்களின் கிராப்ட் பஜார் 2026 கண்காட்சி மற்றும் விற்பனை இன்று (ஜூலை 16 – வியாழக்கிழமை) முதல் கோவையில் தொடங்கியது.
கோவை அவினாசி ரோடு சுகுணா கல்யாண மண்டபத்தில் துவங்கும் இக்கண்காட்சி ஜூலை 21 வரை 6 நாட்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கைவினைக் கலைஞர்கள், நெசவாளர்கள் மற்றும் பாரம்பரிய கலைப் பொருட்கள் தயாரிப்பாளர்கள் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தி நேரடியாக விற்பனை செய்ய உள்ளனர்.
1988-ஆம் ஆண்டு கோவையில் தொடங்கப்பட்ட கிராப்ட் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு அமைப்பின் முக்கிய நோக்கம், தமிழகம் மற்றும் இந்தியாவின் பாரம்பரிய கைவினைக் கலைகளைப் பாதுகாத்து ஊக்குவிப்பதாகும்.இதன் ஒரு பகுதியாக கைவினைக் கலைஞர்களுக்கு வடிவமைப்பு மேம்பாடு,பொதியிடல், சந்தைப்படுத்தல் உள்ளிட்ட துறைகளில் அமைப்பு தொடர்ந்து ஆதரவு வழங்கி வருகிறது.
கிராப்ட் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு-ன் முக்கிய நிகழ்வாக நடைபெறும் இந்த கிராப்ட் பஜார், ஒரே இடத்தில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த திறன்மிக்க கைவினைக் கலைஞர்கள், நெசவாளர்கள் மற்றும் கலைப் பொருட்கள் தயாரிப்பாளர்கள் பொதுமக்களை நேரடியாக சந்தித்து பொருட்களை விற்கும் வாய்ப்பை ஏற்படுத்துகிறது. இதன் மூலம் கலைஞர்களுக்கு புதிய தயாரிப்புகள், வடிவமைப்பு, விலை நிர்ணயம் மற்றும் சந்தைத் தேவைகள் குறித்த கருத்துகளைப் பெறுவதுடன், நிலையான வாழ்வாதாரத்திற்கும் வழிவகுக்கிறது.
நம்பிக்கை திட்டம் மூலம் சிறப்பு ஆதரவு :- பொருளாதார வசதி குறைவால் கண்காட்சிகளில் பங்கேற்க முடியாத திறமையான கைவினைக் கலைஞர்களுக்கு பயணச் செலவு, தங்குமிடம் உள்ளிட்ட உதவிகளை வழங்கும் நோக்கில் 2023-ஆம் ஆண்டு கிராப்ட் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு அறிமுகப்படுத்திய நம்பிக்கை திட்டம் இந்த ஆண்டும் தொடர்கிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த புரியா டிரஸ்ட் மூலம் லம்பாடி எம்பிராய்டரி கலைஞர்கள், கன்னியாகுமரி மாவட்டத்தின் அரிய சிப்பிக் கைவினைப் பொருட்கள் தயாரிப்பாளர்கள், முழகுமூடு கான்வென்ட் எம்பிராய்டரி கலைஞர்கள் மற்றும் உடுமலைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த கைத்தறி பருத்திச் சேலை நெசவாளர்கள் பங்கேற்கின்றனர்.
மேலும், டெல்லியில் உள்ள தஸ்த்கர் கைவினைப் பொருட்கள் வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஓராண்டு உழைப்பை முழுமையாக இழந்த கைவினைக் கலைஞர்களுக்கும் இந்த ஆண்டு கிராப்ட் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு சிறப்பு ஆதரவு வழங்கியுள்ளது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் கிலிம் மற்றும் தரைவிரிப்பு தயாரிப்பாளர்கள், கர்நாடகத்தின் சந்தூர் குஷாலா கேந்திரா (லம்பாடி எம்பிராய்டரி), அசாமின் மூங்கில் மற்றும் பிரம்பு கைவினைப் பொருள் தயாரிப்பாளர்கள், காஷ்மீரின் கையால் வரையப்பட்ட உலோகப் பொருட்கள் மற்றும் பேப்பியர் மாஷே கலைஞர்கள் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
நாடு முழுவதிலுமிருந்து பாரம்பரிய கைவினைப் பொருட்கள் :- இந்த ஆண்டு கண்காட்சியில் சந்தேரி, கட்வால், ஜாம்தானி, பட்டன் படோலா, மதுரை சுங்குடி, காடி, இக்கட், கலம்காரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் பாரம்பரிய நெசவுப் பொருட்கள் இடம்பெறுகின்றன. மேலும், மூங்கில் மற்றும் பிரம்புக் கைவினைப் பொருட்கள், மண்பாண்டங்கள், ப்ளூ பாட்டரி, டோக்ரா உலோகக் கலைப்பொருட்கள், பித்தளைப் பொருட்கள், மரச் சிற்பங்கள், தோல் பைகள், ராஜஸ்தானி மரச்சாமான்கள் உள்ளிட்ட ஏராளமான கைவினைப் பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
அதேபோல், ஒடிசா பட்டச்சித்ரா, வார்லி, பிச்சுவாய், கேரள சுவரோவியங்கள், கோண்ட், மதுபனி, மிதிலா, கலம்காரி உள்ளிட்ட இந்திய பாரம்பரிய ஓவியங்களும் கண்காட்சியில் இடம்பெறுகின்றன.
கோவை மக்கள் இந்தக் கைவினைப் பொருட்கள் பஜாருக்கு வருகை தந்து, கையால் தயாரிக்கப்பட்ட கலைப்பொருட்கள், நெசவுப் பொருட்கள், ஓவியங்கள் உள்ளிட்டவற்றை வாங்கி கைவினைக் கலைஞர்களை ஊக்குவிக்க வேண்டும் என கிராப்ட் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு நிர்வாகக் குழு மற்றும் உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இதன் மூலம் பாரம்பரிய கைவினைக் கலைகளைப் பாதுகாப்பதோடு, கலைஞர்களின் வாழ்வாதாரத்தையும் வலுப்படுத்த முடியும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கண்காட்சி விவரங்கள்:-தேதிகள்: ஜூலை 16 முதல் 21, 2026 வரை, நேரம்: காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை. இடம் : சுகுணா கல்யாண மண்டபம், அவிநாசி சாலை, கோவை. நுழைவுக் கட்டணம்: இலவசம்.