June 7, 2026
தண்டோரா குழு
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு வனத்துறை (கோவை வனக்கோட்டம் – மதுக்கரை வனச்சரகம்) மற்றும் வனஉயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை (WNCT) இணைந்து வாளையார் வனப்பகுதியில் சிறப்பு வனத்தூய்மைப் பணியை மேற்கொண்டன.
இதில் கோவை ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவியர்கள் திரளாகப் பங்கேற்று சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான தங்களது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினர்.நிகழ்ச்சிக்கு கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு, IFS சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தூய்மைப் பணியைத் தொடங்கி வைத்தார்.
பின்னர் மாணவர்களிடையே உரையாற்றிய அவர், பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் வனவிலங்குகளைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து, வனஉயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் திரு. சிராஜுதீன் மாணவர்களிடம் பேசுகையில், “இயற்கையையும் வனங்களையும் காப்பதில் மாணவர்களின் பங்கு மிக முக்கியமானது.
இன்றைய இளைஞர்களின் சுற்றுச்சூழல் பொறுப்புணர்வே நாளைய பசுமையான உலகை உருவாக்கும்” என்று வலியுறுத்தினார். மேலும், எதிர்கால தலைமுறைகளின் நலனுக்காக சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.
மதுக்கரை வனச்சரக அலுவலர் அருண்குமார் அவர்களின் வழிகாட்டுதலின்படி, வாளையார் வனப்பகுதியில் உள்ள இரயில் தண்டவாளப் பகுதிகளில் தீவிர தூய்மைப் பணி நடைபெற்றது. இரயில் பயணிகள் அலட்சியமாக வீசிய பிளாஸ்டிக் கழிவுகள், குடிநீர் பாட்டில்கள் மற்றும் கண்ணாடி பாட்டில்கள் உள்ளிட்ட குப்பைகளை மாணவர்கள் சேகரித்து அகற்றினர்.
வனத்துறை மற்றும் WNCT அமைப்பு இணைந்து நடத்திய இந்த முயற்சி, வனப்பகுதிகளை நெகிழி கழிவுகளிலிருந்து பாதுகாக்கும் நோக்கத்துடன் மட்டுமல்லாமல், பொதுமக்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையிலும் அமைந்தது.மாணவர்கள் காட்டிய உற்சாகமான பங்கேற்பு நிகழ்வின் சிறப்பம்சமாக அமைந்தது.