March 25, 2026
தண்டோரா குழு
உலக சிட்டுக்குருவிகள் தினத்தை முன்னிட்டு கோபால் நாயுடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான பறவைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று மாவட்ட வன அலுவலர் அலுவலகத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு வனத்துறை கோவை வனக்கோட்டம்,கோவை வனச்சரகம் மற்றும் ‘வனஉயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை’ (WNCT) ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் கோவை மாவட்ட வன அலுவலர் N.வெங்கடேஷ் பிரபு (IFS),உதவி வனப் பாதுகாவலர் G. விஜயகுமார், வனச் சரக அலுவலர் V. திருமுருகன், WNCT நிறுவனர் N.சாதிக் அலி, அறங்காவலர் ராஜீவ், ஒருங்கிணைப்பாளர் மு.சிராஜ்தீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.பள்ளி ஆசிரியர்கள் மற்றும் வனத்துறை பணியாளர்களும் பங்கேற்றனர்.
நிகழ்வில் உரையாற்றிய மாவட்ட வன அலுவலர் N. வெங்கடேஷ் பிரபு, பறவைகள் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தி, சூழலியல் சமநிலையை பேணுவதில் அவற்றின் பங்கு முக்கியமானது என தெரிவித்தார்.
உதவி வனப் பாதுகாவலர் G. விஜயகுமார், மாணவர்களுடன் கலந்துரையாடி, பல்லுயிர் பாதுகாப்பில் காடுகளின் முக்கியத்துவம் மற்றும் இயற்கையை காக்க வேண்டிய அவசியத்தை விளக்கினார்.WNCT நிறுவனர் சாதிக் அலி, கோடைக்கால நீர் பற்றாக்குறையை சமாளிக்க பறவைகளுக்கு உதவும் நோக்கில், நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு நீர் கிண்ணங்கள் வழங்கப்பட்டதாக கூறினார்.
ஒருங்கிணைப்பாளர் மு.சிராஜ்தீன்,இளம் தலைமுறையினர் பறவைகள் பாதுகாப்பில் அதிக ஈடுபாடு காட்ட வேண்டும் என வலியுறுத்தி, வீடுகளிலும் சுற்றுப்புறங்களிலும் நீர் கிண்ணங்களை வைத்து பறவைகளுக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டார்.மாணவர்கள் பறவைகள் மற்றும் இயற்கை பாதுகாப்பில் முன்னிலை வகிக்க வேண்டும் என்ற செய்தியுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.