July 4, 2026
தண்டோரா குழு
காருண்யா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கல்வி நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) 33-வது பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள டி.ஜி.எஸ். தினகரன் கலையரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. வேந்தர் டாக்டர் பால் தினகரன் தலைமை தாங்கி, ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்தினார்.
விழாவுக்கு துணைவேந்தர் பேராசிரியர் எலைஜா பிளசிங் வரவேற்புரை வழங்கினார். மகிந்திரா & மகிந்திரா நிறுவனத்தின் ஆட்டோமோட்டிவ் வணிகப் பிரிவுத் தலைவர் மற்றும் மகிந்திரா எலக்ட்ரிக் ஆட்டோமோட்டிவ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆர். வேலுசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பட்டமளிப்பு உரையாற்றினார்.
மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் சவால்களை எதிர்கொண்டு, சமூக முன்னேற்றத்திற்கு பங்களிக்கும் தலைவர்களாக உருவாக வேண்டும் என்று வலியுறுத்திய அவர், “கற்றல் என்பது வாழ்நாள் முழுவதும் தொடரும் பயணம். தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் நாடாக மட்டுமல்லாமல், தொழில்நுட்பத்தை உருவாக்கும் நாடாக இந்தியா உயர வேண்டும்” என்றார்.
அவரது தொழில்துறை மற்றும் தலைமைத்துவப் பங்களிப்பை பாராட்டி, ஆர்.வேலுசாமிக்கு கௌரவ முனைவர் பட்டமும் வழங்கப்பட்டது.பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய வேந்தர் டாக்டர் பால் தினகரன், “இன்று உலகின் அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு (AI) மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே, மாணவர்கள் ஏஐ தொடர்பான திறன்களை தொடர்ந்து மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
அதே நேரத்தில்,வேலை தேடுபவர்களாக மட்டும் இல்லாமல்,வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொழில்முனைவோர்களாக உருவாக வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.மேலும், மாணவர்களின் வெற்றிக்குப் பின்னால் பெற்றோரின் தியாகமும், அர்ப்பணிப்பும் இருப்பதை நினைவுகூர்ந்த அவர், பட்டம் பெற்றவர்கள் தங்களது அறிவையும் திறமையையும் சமூக நலனுக்காக பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
சமூகப் பொறுப்புணர்வை வெளிப்படுத்தும் வகையில், பட்டம் பெற்ற மாணவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் மற்றும் மூன்று சக்கர மின்சார ஸ்கூட்டரை வழங்கினர்.இந்தாண்டுக்கான வேந்தர் விருதுகள், லெட்டிஷியா நிம்ஸி (B.Tech பயோமெடிக்கல் இன்ஜினியரிங்), ஆரோன் ஆன்டே (B.Tech CSE – AI & ML), ஜோஷீனா (M.Tech VLSI Design), ஐஸ்வர்யா (M.Sc Forensic Science), மித்ரா (B.Sc. (Hons.) Agriculture) ஆகியோருக்கு வழங்கப்பட்டன.
பட்டமளிப்பு விழாவில் மாணவர்கள், பெற்றோர், கல்வியாளர்கள் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகிகள் திரளாக பங்கேற்று பட்டதாரிகளை வாழ்த்தினர்.