February 1, 2026
தண்டோரா குழு
கோவை சங்கர் ஐ. ஏ.எஸ் அகாடமி சார்பில், “சிகரம் தொடு” என்ற தலைப்பில் TNPSC தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கான வழிகாட்டல் மாநாடும், அதனைத் தொடர்ந்து குரூப் 4 சாதனையாளர்களுக்கான பாராட்டு விழாவும் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக கோயமுத்தூர் துணை ஆட்சியர் பயிற்சி ஹரி பிரியங்கா கலந்து கொண்டு, மாணவர்களையும் பெற்றோர்களையும் ஊக்குவிக்கும் உரையாற்றினார். அரசு சேவையை இலக்காகக் கொண்டு பயணிக்கும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை, தொடர்ச்சியான உழைப்பு மற்றும் சரியான வழிகாட்டுதல் இன்றியமையாதவை என அவர் தனது உரையில் வலியுறுத்தினார்.
மேலும், இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக ஊரக வளர்ச்சி துறை கூடுதல் இயக்குநர் விஜய்,செல்வ சங்கர் – DCTO, கிருஷ்ண பிரசாத் – DCTO,மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார துறை உதவியாளர் சந்தோஷ்,கூட்டுறவு சங்கங்கள் துறை மூத்த ஆய்வாளர் தனலட்சுமி ஆகியோர் பங்கேற்று TNPSC தேர்வு தயாரிப்பு, நேர மேலாண்மை, மன உறுதி, தேர்வுக்குப் பிந்தைய அதிகாரி வாழ்க்கை மற்றும் அரசு சேவையின் பொறுப்புகள் குறித்து தங்களது அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் TNPSC Group 1 மற்றும் Group 2 சேவைகளில் பணியாற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.100-க்கும் மேற்பட்ட மாணவர்களும் பெற்றோர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். “சிகரம் தொடு” நிகழ்வு, TNPSC கனவுடன் பயணிக்கும் மாணவர்களை அவர்களின் உயரங்களை அடைய வழிகாட்டும் ஒரு ஊக்க நிகழ்வாக அமைந்தது.
இதனைத் தொடர்ந்து,TNPSC Group 4 தேர்வில் வெற்றி பெற்ற சங்கர் ஐ. ஏ.எஸ் அகாடமி மாணவர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது. சாதனை புரிந்த மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பாராட்டு நினைவுப்பரிசுகளும் வழங்கப்பட்டன. இந்த விழா, தற்போது பயிற்சியில் இருக்கும் மாணவர்களுக்கு ஒரு வலுவான முன்மாதிரியாக அமைந்தது.
நிகழ்வில் உரையாற்றிய சங்கர் ஐ. ஏ.எஸ் அகாடமி கோவை கிளைத் தலைவர் அருண் செந்தில்நாதன்,
“இத்தகைய பாராட்டு மற்றும் வழிகாட்டல் நிகழ்வுகள், மாணவர்களுக்கு பெரும் ஊக்கத்தை அளிப்பதோடு, எங்கள் அகாடமியிலிருந்து ஆயிரக்கணக்கான அரசு அதிகாரிகளை உருவாக்கும் ஒரு ஊக்க இயக்கமாக செயல்படுகிறது” என்று தெரிவித்தார்.
“சிகரம் தொடு” நிகழ்ச்சி மாணவர்களும் பெற்றோர்களும் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், அரசு சேவையை நோக்கி பயணிக்கும் இளம் தலைமுறைக்கு ஒரு உறுதியான ஊக்கமாக அமைந்தது.