July 4, 2026
தண்டோரா குழு
விவசாயிகள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த அக்ரி இன்டெக்ஸ் 2026 வேளாண் கண்காட்சி, கோவை கொடிசியா வளாகத்தில் வரும் ஜூலை 9 முதல் 13 வரை நடைபெற உள்ளது என்று கண்காட்சியின் தலைவர் ஸ்ரீ ஹரி தெரிவித்தார்.
இதற்கான விளம்பர பலகை வெளியீட்டு விழா கோவை கொடிசியா தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவின் முன்னணி வேளாண் கண்காட்சிகளில் ஒன்றான அக்ரி இன்டெக்ஸின் 24-வது பதிப்பு இந்த ஆண்டு நடைபெறுவதாக கூறினார்.
இந்தக் கண்காட்சியில் வேளாண்மை, தோட்டக்கலை, பால்பண்ணை, கோழிப்பண்ணை, உணவு பதப்படுத்துதல் உள்ளிட்ட துறைகளின் நவீன தொழில்நுட்பங்கள், இயந்திரங்கள் மற்றும் புதுமையான தீர்வுகள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துதல், அறிவுப் பரிமாற்றத்தை ஏற்படுத்துதல் மற்றும் தொழில்நுட்ப புத்தாக்கங்களை ஊக்குவிப்பதே இந்தக் கண்காட்சியின் முக்கிய நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு சந்தை வாய்ப்புகள், புதிய வணிக தொடர்புகள் மற்றும் தொழில்நுட்ப இணைப்புகளை உருவாக்கும் சிறந்த தளமாகவும் இந்தக் கண்காட்சி அமையும் என்றார்.
கண்காட்சியின் தொடக்க விழாவில் சக்தி சுகர்ஸ் தலைவர் டாக்டர் மாணிக்கம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் பொறுப்பு துணைவேந்தர் டாக்டர் சுப்ரமணியன் மற்றும் துணைவேந்தர் டாக்டர் பெலிக்ஸ் ஆகியோர் பங்கேற்று தொடங்கி வைக்க உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் அக்ரி இன்டெக்ஸ் 2026 துணைத் தலைவர் விஜயகுமார், கொடிசியா தலைவர் ரங்கசாமி, செயலாளர் விஜய் ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.