• Download mobile app
07 May 2024, TuesdayEdition - 3009
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இராக்கில் பயங்கரவாதிகளிடம் சிக்கிய 10 வயது சிறுமி மீட்பு

October 24, 2016 தண்டோரா குழு

அந்தச் சிறுமியின் கண்களில் இருந்த பீதி மாறி, கண்ணீர் மட்டுமே நிரம்பியிருந்தது.
தன்னைக் காப்பாற்றிய இராக் ராணுவத்தினரைக் கட்டிப் பிடித்து, “நன்றி, நன்றி” என்று கூறிக் கொண்டிருந்தார். “நான் உயிரோடு திரும்புவேனோ மாட்டேனோ என்று நினைத்திருந்தேன்.என்னைக் காப்பாற்றிவிட்டீர்கள். உங்கள் பாதங்களை முத்தமிட்டு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்” என்றாள் கஃபேர் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஆயிஷா (10) என்ற சிறுமி. அவளது கிராமம் தீவிரவாதிகளின் பிடியில் உள்ள மோசூல் நகருக்கு 18 மைல் தொலைவில் உள்ளது.

ஈராக்கின் நாட்டின் வடக்கு மாகாணத்தில் உள்ள மொசூல் என்ற நகரை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தினர் கடந்த 2014ம் ஆண்டு வளைத்துப் பிடித்துக் கொண்டனர். அவர்களுடைய ஈவு இரக்கமில்லாத கெடுபிடியில் ஏராளமான பொதுமக்கள் சிக்கி தவித்து வருகின்றனர்.

இதன் காரணமாக ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தினரிடம் சிக்கித்தவிக்கும் பொதுமக்களை மீட்பதற்கு ஈராக் அரசுடன் இணைந்து அமெரிக்காவும் தீவிரமான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், மொசூல் நகரில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் கட்டுக்குள் உள்ள பகுதியை மீட்பதற்காக அமெரிக்க படைகள் முயற்சி செய்து வருகின்றன. அதன் பயனாக, 10 வயது சிறுமியான ஆயிஷா என்ற சிறுமியை ராணுவத்தினர் மீட்டுள்ளனர். அவளைப் போல் ஏராளமானோர் இன்னமும் பயங்கரவாதிகளின் பிடியில் இருப்பதாகவும், அவர்களில் பலர் இறந்திருக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது.

உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருந்த ஆயிஷா, “பயங்கரவாதிகளின் பிடியில் கடந்த இரண்டு வருடமாக சிக்கிக் கொண்டிருந்தோம். என் கண் முன்னாலேயே என் தந்தை அவர்கள் படுகொலை செய்தனர். தாய் வைத்திருந்த நகைகளை எல்லாம் பறித்துக் கொண்டனர்.கடந்த மூன்று நாட்களாக எனக்கும் என் தாய்க்கும் தீவிரவாதிகள் சாப்பாடே கொடுக்கவில்லை.இனி உயிர் பிழைத்து ஊருக்குச் செல்லவே முடியாது. இங்கேயே செத்துப் போய்விடுவோம் என்றுதான் நினைத்திருந்தேன்.

என்னைப்போல ஏராளமான சிறுவர், சிறுமியரையும் பிடித்து வைத்துள்ளனர். அவர்களில் எத்தனைப் பேர் உயிருடன் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை” என்றாள்.“நீங்கள் இங்கு வரமாட்டீர்கள் என்று நினைத்தேன். ஆனால் நீங்கள் வந்து விட்டீர்கள்” என்று கூறி சாப்பிடுவதற்கு ராணுவத்தினர் கொடுத்த ரொட்டித் துண்டைச் சாப்பிட்டபோது, ராணுவ வீரர்களே கண் கலங்கினர்.

இதைக் கேட்ட ஒரு ராணுவ வீரர் அவளை அன்போடு கட்டி அணைத்து அவளுடைய நெற்றியில் முத்தமிட்டு, அவளைப் பத்திரமான இடத்திற்கு தூக்கிக் கொண்டு சென்றார். ஆயிஷாவையும் அவளுடைய தாயையும் அருகில் உள்ள கய்யரா என்னும் இடத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

மேலும், இந்த போராட்டத்தின்போது, சுமார் 59 கிராமங்கள் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பிடம் இருந்து விடுவிக்கப்பட்டது. சுமார் 473 ஐஎஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் மேலும் 22 பேர் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர்.

“இப்படி அப்பாவி மக்களைப் பிடித்துச் செல்லும் தீவிரவாதிகள், அவர்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவர்” என்று ஐ.நா. மனித உரிமைகள் குழுவின் தலைவர் ஜியெத் ராட்-அல்-ஹுசைன் கூறினார்.

மேலும் படிக்க