• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இறந்த தாய் யானையைச் சுற்றிவரும் குட்டியால் சோகம்.

July 5, 2016 தண்டோரா குழு

கோவையை அடுத்துள்ள நரசீபுரத்தை ஒட்டியுள்ள பகுதியில் இன்று பெண் யானை ஒன்று உயிரிழந்தது. அதன் குட்டி யாரையும் அதனருகே நெருங்கவிடாமல் கண்ணீருடன் சுற்றி வருகிறது.

கோவையை அடுத்துள்ள நரசீபுரம் அருகே உள்ள வைதேகி நீர் வீழ்ச்சி பகுதியில், கடந்த ஒரு வார காலமாக உடல் நலக்குறைவுடன் பெண் காட்டு யானை ஒன்று தனது குட்டியுடன் சுற்றி வந்தது. இது குறித்து வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அதற்குச் சிகிச்சை வழங்க வனத்துறையினர் முற்பட்டனர்.

ஆனால் அந்த யானை அங்கும் இங்கும் சுற்றி வந்ததாலும் ஆக்ரோசமாக இருந்ததாலும் சிகிச்சை வழங்க முடியாமல் வனத்துறையினர் தடுமாறி வந்தனர். இந்நிலையில் இன்று வரமுங்கில் பள்ளம் என்ற இடத்தில் அந்தப் பெண் யானை உயிரிழந்து சடலமாக காணப்பட்டது.

அதன் அருகே அதனுடைய 5 வயது மதிக்கத்தக்கக் குட்டி ஆண் யானையொன்று கண்ணீருடன் சுற்றி வருகிறது. பல மணி நேரமாக இறந்த யானையை விட்டு அகலாமல் அந்தக் குட்டி யானை ஆவேசத்துடன் பிளிறிக் கொண்டேயிருக்கிறது.

இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் இறந்த யானையின் உடலை மீட்டு இறந்த காரணத்தை கண்டுபிடிக்க முயன்றனர். ஆனால் இறந்த கிடக்கும் பெண் யானையின் உடலை நெருங்க விடாமல் அந்த குட்டியானை சடலத்தை ஆவேசத்துடன் சுற்றி வருகிறது.

மேலும், குட்டி யானை வனத்துறையினரைத் தாக்குவதுபோல ஆவேசமாக அருகில் வந்து விரட்டியடிக்கிறது. இதனால் இறந்த தாய் யானையின் உடலை அங்கிருந்து அப்புறப்படுத்த முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.

இறந்த யானையின் அருகில் குட்டி யானை கண்ணீருடன் நடத்திடும் பாசப்போராட்டம் காண்பவர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. குட்டி யானையை அங்கிருந்து வேறு இடத்துக்கு அனுப்பிய பிறகுதான் யானையின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வு செய்ய அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்.

மேலும், இறந்த பெண் காட்டு யானைக்கு 30 வயது இருக்குமெனவும், உடல் நலக்குறைவினால் யானை இறந்திருக்கலாம் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் கோவை மாவட்டத்தில் 5 காட்டு யானைகள் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க