November 1, 2018 தண்டோரா குழு
டிஎஸ்பி விஷ்ணுபிரியா உயர் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக தற்கொலை செய்யவில்லை என்ற சி.பி.ஐ அறிக்கைக்கு எதிராக,விஷ்ணுபிரியாவின் தந்தை தரப்பில் ஆட்சேபனை மனு மீது எதிர்வாதம் நடத்த வருகின்ற 15 ஆம் தேதிக்கு மேல் கால அவகாசம் வழங்க முடியாது என நீதிபதி திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.
கடந்த 2015 ம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டார்.உயரதிகாரிகளின் அழுத்தம் காரணமாக விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டதாக புகார் எழுந்தது.இதுதொடர்பாக விசாரணை நடத்திய சிபிஐ,குற்றவாளிகள் யாரும் இல்லை எனவும்,இவ்வழக்கை கைவிடுவது எனவும் கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்தது.
இதன் மீதான விசாரணைக்காக விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.இதில் விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை முறையாக நடைபெறவில்லை எனக் கூறி ஆட்சேபனை மனு தாக்கல் செய்தார்.மேலும்,விஷ்ணுபிரியாவின் தந்தை தரப்பு வழக்கறிஞர் வாதாடுகையில், நீதிமன்றம் உத்தரவின் படி காவல் துணை ஆணையர் மகேஸ்வரி,காவல் ஆய்வாளர் சந்திரகலா,துணை ஆணையர் இனிகோ திவ்யன் உள்ளிட்ட 7 பேரிடம் சி.பி.ஐ விசாரணை மேற்கொண்டு இருக்க வேண்டும்,ஆனால் இந்த 7 பேரிடமும் விசாரணை நடத்தாமல்,சி.பி.ஐ விசாரணையை முடித்துள்ளது ஏற்புடையதல்ல என ரவி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை இன்று வந்த நிலையில் சி.பி.ஐ தரப்பில் எதிர்வாதம் செய்ய வேண்டிய நிலையில் அவகாசம் கோரினார். இதனால் வருகின்ற 15 ஆம் தேதி எதிர்வாதம் நடத்த உத்தரவிட்ட நீதிபதி நடராசன்,அதற்கு மேல் கால அவகாசம் வழங்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.