June 26, 2026
தண்டோரா குழு
தமிழ்நாட்டில் மருத்துவத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனை, ‘ரோட்டாரெக்ஸ் ஆதரோத்ரோம்பெக்டமி’ (Rotarex Atherothrombectomy System) என்ற நவீன முறையைப் பயன்படுத்தி, ஒரு சிக்கலான இரத்தக் கட்டி நீக்கும் சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளது.
மாநிலத் தலைநகரான சென்னைக்கு அடுத்து, தமிழ்நாட்டில் இந்த அதிநவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். இது நோயாளிகளுக்கு பாரம்பரிய இரத்தக் கட்டியைக் கரைக்கும் சிகிச்சைகளை விட மிகவும் பாதுகாப்பான மற்றும் வேகமான மாற்றாக அமைந்துள்ளது.
நடுத்தர வயதுடைய ஒரு ஆண் நோயாளி, தனது வலது காலில் 10 நாட்களாக கடுமையான வலியுடன் கேஎம்சிஹெச் மருத்துவமனைக்கு வந்தார். பரிசோதனையில், அவருடைய இதயத்திலிருந்து நகர்ந்து வந்த ஒரு இரத்தக் கட்டி, காலில் உள்ள இரத்தக் குழாயை அடைத்து இரத்த ஓட்டத்தை முற்றிலும் பாதித்திருந்தது தெரியவந்தது. உடனடியாக சிகிச்சை அளிக்கவில்லை என்றால், அவரது காலை முற்றிலுமாக இழக்க வேண்டிய ஆபத்தான நிலை இருந்தது.
இதற்கு முன்பு, இதுபோன்ற அடைப்புகளை நீக்க ‘துரோம்போலிசிஸ்’ (Thrombolysis) என்ற முறை பயன்படுத்தப்பட்டது. இதில் இரத்தக் கட்டியைக் கரைக்கும் சக்திவாய்ந்த மருந்துகள் நீண்ட நேரம் உடலில் செலுத்தப்படும். இந்த மருந்துகளால் உடலில் உள் இரத்தக்கசிவு ஏற்படும் அபாயம் அதிகம். சில கடுமையான சந்தர்ப்பங்களில், மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு, பக்கவாதம் (stroke) ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
இதற்கு நேர்மாறாக, இந்த ரோட்டாரெக்ஸ் கருவி இரத்தக் கட்டியை சிறு துண்டுகளாக உடைத்து, அதே நேரத்தில் அதை அப்படியே உறிஞ்சி வெளியே எடுத்துவிடுகிறது. இதனால் ஆபத்தான மருந்துகள் தேவைப்படுவதில்லை மற்றும் இரத்தக்கசிவு ஏற்படும் ஆபத்தும் முற்றிலும் தவிர்க்கப்படுகிறது.
கேஎம்சிஹெச் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் நல்லா ஜி.பழனிசாமி “எங்கள் மருத்துவமனையின் இன்டர்வென்ஷனல் ரேடியாலஜி துறை டாக்டர் மேத்யூ செரியன், டாக்டர் பங்கஜ் மேத்தா மற்றும் டாக்டர் சந்தோஷ் ஆகியோர் இந்த சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டதற்கு வெகுவாக பாராட்டினார்.
உலகின் மிகச்சிறந்த மருத்துவ வசதிகளை நமது மக்களும் எளிதில் பெற்றுப் பலனடைய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். ரோட்டாரெக்ஸ் மற்றும் ஜெட்ஸ்ட்ரீம் போன்ற கருவிகள் மூலம், நம் பகுதி மக்கள் இனி இதுபோன்ற அவசர சிகிச்சைகளுக்காகப் பெரிய நகரங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை” என்று குறிப்பிட்டார்.
சிகிச்சை முடிந்த உடனேயே இரத்த அடைப்பு முழுமையாக நீக்கப்பட்டு, இரத்த ஓட்டம் சீரானது. நோயாளியின் வலியும் உடனடியாகக் குறைந்தது. ஆச்சரியப்படும் விதமாக, சிகிச்சை முடிந்த ஒரே நாளில் நோயாளி எழுந்து நடந்து, தனது சாதாரண வேலைகளைச் செய்யத் தொடங்கினார்.
இரத்தக் குழாய் தொடர்பான அனைத்துப் பிரச்சனைகளையும் குணப்படுத்த கேஎம்சிஹெச் இப்போது முழுமையான வசதிகளைப் பெற்றுள்ளது. மென்மையான இரத்தக் கட்டிகளை நீக்க ‘ரோட்டாரெக்ஸ்’ உதவுவது போல, மிகவும் கடினமான சுண்ணாம்பு படிந்த அடைப்புகள் மற்றும் ஏற்கனவே பொருத்தப்பட்ட ஸ்டென்டில் அடைப்பை நீக்க ‘ஜெட்ஸ்ட்ரீம் ஆதரெக்டமி’ (Jetstream Atherectomy) என்ற சிகிச்சையையும் இந்த மேற்கு மற்றும் தென் தமிழகத்தில் முதன்முதலாக கேஎம்சிஹெச் சமீபத்தில் செய்து காட்டியுள்ளது. இந்த இரு தொழில்நுட்பங்களும், கடினமான அடைப்புகளைத் நீக்க உதவுகின்றன. இதனால் நிரந்தர ஸ்டென்ட் வைப்பதின் தேவையை வெகுவாகக்குறைக்கின்றது.
கேஎம்சிஹெச் செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி “இந்த வெற்றி நோயாளிகளின் பாதுகாப்பு மற்றும் புதிய தொழில்நுட்பங்களில் கேஎம்சிஹெச் கொண்டுள்ள அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. ஒரு கடுமையான இரத்தக் குழாய் பாதிப்பு ஏற்பட்ட 24 மணி நேரத்திற்குள் நோயாளி மீண்டும் நடப்பதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று கூறினார். மேலும் இந்த சாதனையைப் படைத்த டாக்டர் மேத்யூ செரியன் மற்றும்அவரது குழுவினருக்கு தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.