November 1, 2018 தண்டோரா குழு
கேரளா மாநிலத்தில் ஆலப்புழா மாவட்டத்தின் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட அக்ஷரலக்ஷம் எழுத்தறிவு இயக்கத் தேர்வில் 96 வயதுடைய மூதாட்டி 98/100 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார்.
கேரளா மாநிலத்தில் பல இடங்களில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில்அக்ஷரலக்ஷம் எழுத்தறிவு இயக்கத் தேர்வு நடைபெற்றது.இதில் சேர்ந்து பயில்பவர்களுக்கு வாசித்தல்,எழுதுதல்,கணிதம் ஆகியவற்றின் அடிப்படையில் ஆண்டுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன.அவ்வகையில் இந்த ஆண்டு நடைபெற்ற இறுதித் தேர்வை எழுதியவர்களில் 42 ஆயிரத்து 933 பேர் வெற்றி பெற்றனர்.
இந்த தேர்வு எழுதியவர்களில் கேரளா ஆலப்புழாவைச் சேர்ந்த கார்த்தியாயினி அம்மாள்(96) தான் மிக வயதான மாணவி.இத்தேர்வு முடிவுகள் நேற்று புதன் கிழமை வெளியிடப்பட்டன.அக்ஷரலக்ஷம் எழுத்தேர்வில் கார்த்தியாயினிஅம்மாள் 98 சதவீதம் மதிப்பெண்களைப் பெற்று அதிர்ச்சியை தந்துள்ளார்.இந்த பாட்டி எழுத்தில் 40 க்கு 38 மதிப்பெண்களையும்,மற்ற தேர்வுகளில் முழு மதிப்பெண்ணை பெற்றுள்ளார்.
இதைத் தொடர்ந்து திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ள விழாவில்,கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்,கார்த்தியாயினி பாட்டிக்கு தகுதிச் சான்றிதழ் வழங்க உள்ளார்.கல்வி கற்க வேண்டும் என்ற ஆர்வம் காரணமாக கடந்த 6 மாதத்துக்கு முன்,அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் கார்த்தியானி அம்மாள் சேர்ந்துள்ளார். சாதனைக்கு வயது ஒரு தடையல்ல என்பதை கார்த்தியானி அம்மாள் நிரூபித்துள்ளார்.இதையடுத்து,கார்த்தியானி அம்மாள் பாட்டிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.