September 26, 2016
தண்டோரா குழு
கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமாரின் இறுதி ஊர்வலத்தின் போது வன்முறையில் ஈடுபட்டதாக இதுவரை 801 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் கடந்த 22ம் தேதி அவரது வீட்டின் அருகே மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதையெடுத்து இந்து முன்னணி சார்பில் முழுஅடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.இதைதொடர்ந்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து சுமார் 18 கிலோ மீட்டர் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டஅவரது உடல் துடியலூரில் தகனம் செய்யப்பட்டது.
இந்தநிலையில், ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களில் ஒரு தரப்பினர் கலவரத்தில் ஈடுபட்டனர். அப்போது, அங்கிருந்த கடைகள், பேருந்துகள், ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் எல்லாம் அடித்து நொறுக்கப்பட்டன. மேலும், துடியலூர் பகுதியில் இரு கடைகள் மற்றும் காவல்துறை வாகனம் தீவைத்து எரிக்கப்பட்டன.
இதையெடுத்து,காவல்துறையினர் வன்முறையில் ஈடுபட்டதாக இதுவரை 801 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அதில், பொதுச்சொத்துக்களை சேதப்படுத்திய குற்றத்திற்காக நகரப்பகுதியில் 145 பேரும், புறநகர் பகுதியில் 160 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கைது செய்யபட்ட அனைவரும் திருச்சி, சேலம் மற்றும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.