January 11, 2019
தண்டோரா குழு
2019-20 கல்வியாண்டு முதல் 10ம் வகுப்பு கணிதத் தேர்வை, மாணவர்களின் திறனுக்கு ஏற்ப இரண்டு நிலைகளாக நடத்த சிபிஎஸ்இ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
பொதுவாகவே கணிதப் பாடம் பிடிக்காதவர்கள் என்று ஒரு தனி பட்டாளமே உண்டு. அதிலும், மெட்ரிக் பாடங்களை விட சிபிஎஸ்இ-யில் கணிதத் தேர்வுத்தாள் சற்று கடினமாக இருக்கும் என்பது பொதுவான ஒரு கருத்து. இந்நிலையில், கணிதப்பாடம் குறித்த மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் பொருட்டு, சிபிஎஸ்இ நிர்வாகம் புதிய தேர்வு முறையை கொண்டுவரவுள்ளது. அதாவது சிபிஎஸ்இ கணிதத்தேர்வு மாணவர்களின் திறமைக்கு ஏற்ப இரண்டு நிலைகளாக பிரிக்கப்படுகிறது. பேசிக் லெவல்(Basic Level) மற்றும் ஸ்டாண்டர்டு லெவல்(Standard Level).
இதில், பேசிக் லெவல்(Basic Level) பிரிவில் மாணவர்களுக்கு கேள்விகள் எளிமையாக மற்றும் நேரடியாகவும், அதே நேரத்தில் ஸ்டாண்டர்டு லெவல்(Standard Level) பிரிவில் தற்போது நடைமுறையில் இருப்பது போன்று கேள்விகள் சற்று கடினமாக இருக்கும். எனவே மாணவர்கள் தங்களுக்கு ‘பேசிக் லெவல் மட்டும் போதும்’ என்றால் அதனை மட்டும் தேர்வு செய்துகொள்ளலாம். மற்றவர்கள் இரண்டு நிலை தேர்வுகளையும் எழுத வேண்டும். 2020ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் தேர்வு முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது. முன்னதாக, மாணவர்கள் 2019 அக்டோபர்/ நவம்பர் மாதங்களில் எதை தேர்வு செய்கிறீர்கள் என்பது குறித்து பள்ளியில் தெரிவிக்க வேண்டும் அல்லது நீங்களே ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது குறிப்பிடலாம்.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், பேசிக் லெவலில் தேர்ச்சி பெற்ற மாணவர் 11ம் வகுப்பில் கணிதப் பாடத்தை தேர்வு செய்ய முடியாது. அவ்வாறு 11ம் வகுப்பில் கணிதப்பாடத்தை தேர்வு செய்ய வேண்டுமென்றால், பேசிக் & ஸ்டாண்டர்டு ஆகிய இரண்டு நிலைகளிலும் தேர்ச்சி பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று 2020ம் ஆண்டு பேசிக் லெவலை தேர்வு செய்து தேர்ச்சி பெற்ற பின்னர், 11ம் வகுப்பில் கணிதப்பாடத்தை எடுக்க விரும்பினால் அடுத்த முறை நடைபெறும் தேர்வில் ஸ்டாண்டர்டு லெவல் தேர்வு எழுதி தேர்ச்சி பெறலாம். பின்னர் 11ம் வகுப்பு கணிதப் பாடத்தில் சேரலாம். அதே நேரத்தில் 2019ம் ஆண்டு கணிதத் தேர்வு தற்போது நடைமுறையில் இருப்பது போன்றே நடத்தப்படும் எனவும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.