December 14, 2020
மூலப்பொருட்கள் விலையேற்றத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரி, கோவையில் உள்ள 400 பவுண்டரி தொழிற்கூடங்கள் வருகின்ற 16 ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளன.
கோவை மாவட்டத்தில் 400 குறு மற்றும் சிறு பவுண்டரிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் பவுண்டரி தொழில் சார்ந்த மூலப்பொருட்கள் விலை 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.இதனால் பவுண்டரி தொழில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் மூலப்பொருட்கள் விலையேற்றத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரி, வருகின்ற 16 ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கோவை குறு மற்றும் சிறு பவுண்டரி அதிபர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்துப் பேசிய அச்சங்கத்தின் தலைவர் சிவசண்முக குமார்,
மூலப்பொருட்கள் விலையேற்றத்தினால் பவுண்டரி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.மூலப்பொருட்கள் தட்டுப்பாடு நிலவுவதாகவும்,செயற்கையாக மூலப்பொருட்கள் விலையேற்றம் மற்றும் தட்டுப்பாடு ஏற்படுத்தப்படுவதாகவும் அவர் கூறினார். மூலப்பொருட்கள் விலையேற்றத்தை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், இதில் கோவை மாவட்டத்தில் உள்ள 400 பவுண்டரிகள் பங்கேற்கும் எனவும் அவர் தெரிவித்தார்.இதனால் நாள் ஒன்றுக்கு 30 கோடி ரூபாய் வரை உற்பத்தி பாதிக்கப்படுமெனவும், இத்தொழிலை சார்ந்துள்ள 2 இலட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் இத்தொழிலை சார்ந்து இயங்கி வரும் வெட் கிரைண்டர், இன்ஜினீரிங், மோட்டர் பம்புகள், ஆட்டோ மொபைல்ஸ் உள்ளிட்ட தொழில்களும் பாதிக்கப்படுமென அவர் தெரிவித்தார்.