January 12, 2019
தண்டோரா குழு
பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவிற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
சமூகப் பிரிவை அடிப்படையாகக் கொண்டு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அதில், பொருளாதாரரீதியில் பின்தங்கிய பொதுபிரிவு சமூகத்தினருக்கு இதுவரை இந்தியாவில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதில்லை. இதற்கிடையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை மத்திய அரசு கொண்டுவந்தது. இந்த மசோதா எதிர்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிறைவேற்றபட்டது.
இதையடுத்து, குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக இந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று இந்த மசோதாவிற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கான கோப்பில் அவர் கையெழுத்திட்டுள்ளார். குடியரசுத் தலைவர் ஒப்புதலைத் தொடர்ந்து 10 சதவீத இட ஒதுக்கீடு சட்டமானது.