January 18, 2019
தண்டோரா குழு
பொருளாதார ரீதியாக பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீட்டை ரத்து செய்ய உத்தரவிடக்கோரி திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சமூக அடிப்படையில், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கும், இதர பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கும் கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதைப்போல்
பொருளாதார ரீதியாக பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் அரசியல் சட்ட திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.பின்னர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து இது சட்டமானது.
இந்நிலையில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, பொதுப்பிரிவில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில்,
இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டம் அல்ல, பொதுப்பிரிவினருக்கு பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என்பது இயற்கை நீதிக்கும் அரசமைப்புச் சட்டத்திற்கும் எதிரானது. இந்த 10 சதவீத இடஒதுக்கீட்டால், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கும், இதர பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கும் கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்குவது பாதிக்கப்படும்.
தமிழகத்தில் ஏற்கெனவே 69 சதவீத இடஒதுக்கீடு உள்ள நிலையில், மேலும் 10 சதவீதம் என்பது இடஒதுக்கீட்டின் அளவை 79 சதவீதம் ஆக மாற்றிவிடும். எனவே, இந்த புதிய, பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டு முறையை ரத்து செய்து, அதற்கான சட்டத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் என மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.