February 14, 2019
தண்டோரா குழு
ஹெல்மெட் அணிய சொல்வது தவறா? நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வலியுறுத்துவது தவறா? என புதுச்சேரி துணை ஆளுநர் கிரண்பேடி கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுச்சேரியில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த முதலமைச்சர் நாராயணசாமி, மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய பின்னர் தலைகவச உத்தரவை அமல்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்தார். ஆனால் அவரது கோரிக்கை ஏற்கப்படவில்லை. இதனையடுத்து, மாநில அரசு செயல்படுத்த முடிவு செய்த 30 நலத்திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்க கிரண்பேடி மறுத்துள்ளதாக குற்றம் சாட்டிய நாராயணசாமி, நேற்று அரசு நிகழ்ச்சிகளை ரத்து செய்தார். இதுமட்டுமின்றி அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களுடன் ஆலோசித்த அவர், பிற்பகலில் ஆளுநர் மாளிகை முன்பு கருப்பு உடை அணிந்து போராட்டத்தை தொடங்கினார்.
இந்நிலையில், சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட கிரண்பேடி பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது பேசிய அவர்,
முதல்வர் தர்ணாவில் ஈடுபடுவது முறையானதா? 36 பிரச்னைகள் தொடர்பாக பிப்.,7 ம் தேதியன்று நாராயணசாமி எனக்கு கடிதம் அனுப்பினார். அதில் பாதி தீர்க்கப்பட்டுவிட்டது. நியாய விலைக்கடை போன்ற பிரச்னைகள் தீர்க்கப்பட்டுள்ளது. அவரது கடிதத்திற்கு பதிலளிக்க அவகாசம் கொடுக்காமல் தர்ணா செய்கிறார். பிப்.,21 அன்று காலை அவரை சந்திக்க நேரம் அளித்துள்ளேன். இன்று முதல் நான் சுற்றுப்பயணம் செல்ல உள்ளேன். பிப்.,20 அன்று நள்ளிரவு தான் திரும்புவேன் என கூறிவிட்டேன். ஆனால் முன்னறிவிப்பின்றி தர்ணா செய்து வருகிறார்.
இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய வேண்டும் என உச்சநீதிமன்றமே கூறியுள்ளது. ஹெல்மெட் உத்தரவை அமல்படுத்த இன்னும் எவ்வளவு காலம் வேண்டும் என புதுச்சேரி முதலமைச்சர் நினைக்கிறார்? ஹெல்மெட் அணிய சொல்வது தவறா? நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வலியுறுத்துவது தவறா? மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி தினமும் ரேடியோவில் பேசி வருகிறார். மத்திய அரசின் தலையீடு இருப்பதாக கூறுவது தவறு. நாராயணசாமி கடிதம் அளித்ததற்கு பதிலாக அவகாசம் அளித்திருக்கலாம். பேச்சுவார்த்தைக்கு நேரம் ஒதுக்கி கடிதமும் அனுப்பி விட்டேன். பிப்.,21 அன்று காலை 10 மணிக்கு வாருங்கள் பேசலாம் என கூறிவிட்டேன்.
இந்த தேதிக்குள் பதிலளிக்காவிட்டால், போராட்டம் நடத்தப்படும் என ஏற்கெனவே நாராயணசாமி தெரிவிக்கவில்லை. நேற்று கடிதம் அளித்து விட்டு, அவகாசம் கொடுக்காமல், முன்னறிவிப்பின்றி போராட்டம் நடத்துகிறார். ஹெல்மெட் உத்தரவை அமல்படுத்தும் விவகாரத்தில் நாராயணசாமி ஏன் குறுக்கே வருகிறார்? என்றும், உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதில் என்ன தவறு இருக்க முடியும்? என்றும் கேள்வி எழுப்பினார்.