September 18, 2026
தண்டோரா குழு
இந்தியாவின் முன்னணி மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைடு இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் தனது ஆரோக்கிய சேவா கேந்திரா (ஏஎஸ்கே) நாகர்கோவில் மையம் மூலம் விழிப்புணர்வு மற்றும் இலவச மெகா மருத்துவ முகாமை நடத்தியது.
இது குறித்து ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் வணிகத் தலைவரும் நிர்வாக துணைத் தலைவருமான பாலாஜி பாபு சி தெரிவிக்கையில்,
இம்முகாமின் மூலம் சுமார் 350 பொதுமக்கள் நோய்த்தடுப்பு மருத்துவச் சேவைகளைப் பெற்றனர்.கன்னியாகுமரி மருத்துவ மிஷன் மற்றும் நெய்யூர் சி.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றுடன் இணைந்து நடத்தப்பட்ட இம்முகாம் நாகர்கோவில், வடசேரி, ஆசம்பு சாலையில் உள்ள சத்யா மஹாலில் நடைபெற்றது. இம்முகாமை மாநகராட்சி ஆணையர் டி. ஆர். ஐஸ்வர்யா மற்றும் இந்திய மருத்துவச் சங்கத்தின் தேசியத் தலைவர் டாக்டர் கே. விஜயகுமார், எம்.டி., ஆகியோர் முன்னிலையில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மேரி பிரின்சி லதா அவர்கள் தொடங்கி வைத்தார்.
ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தின் சார்பில் வணிகத் தலைவரும் நிர்வாக துணைத் தலைவருமான பாலாஜி பாபு சி, சிஎஸ்ஆர் தலைவர் டாக்டர் தினேஷ் ராஜ் கே.எஸ், மதுரை மண்டலத் தலைவர் வினோத் பால் மற்றும் திருநெல்வேலி உதவி மண்டலத் தலைவர் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்த முகாம், நோய்த் தடுப்புப் பரிசோதனைகள் மற்றும் சிறப்பு மருத்துவ ஆலோசனைகளை ஒரே கூரையின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. இதயவியல், எலும்பியல், மகப்பேறியல், குழந்தைகள் நலன் மற்றும் புற்றுநோயியல் ஆகிய துறைகளின் சிறப்பு மருத்துவ ஆலோசனைகளுடன், இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை, ஈ.சி.ஜி, கண் பரிசோதனை, மற்றும் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகளையும் பொதுமக்கள் இலவசமாகப் பெற்றனர்.
மேலும்,வழக்கமான சுகாதாரப் பரிசோதனைகள், உடல்நல அபாயங்களை முன்னதாகவே கண்டறிதல் மற்றும் சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை பெறுவதன் முக்கியத்துவம் குறித்தும் மருத்துவ வல்லுநர்கள் பங்கேற்பாளர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினர்.
நாகர்கோவில்,வடசேரி,ஆசம்பு சாலை, முதல் தளத்தின் கதவு எண் 114-ல் அமைந்துள்ள ஸ்டார் ஹெல்த்தின் ‘ஆரோக்கிய சேவா கேந்திரா’ தொடர்ந்து மேற்கொண்டு வரும் சேவைகளின் தொடர்ச்சியாகவே இம்மருத்துவ முகாம் அமைந்தது. நாகர்கோவில் ஏஎஸ்கே மையம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை 2,900-க்கும் மேற்பட்ட பயனாளிகள் வருகை பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 2,100-க்கும் மேற்பட்ட ஆய்வகப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, 2,640-க்கும் மேற்பட்ட மருந்தகச் சேவைகளும் வழங்கப்பட்டுள்ளன. மேலும், சுமார் 180 பேருக்கு நியூமோகாக்கல் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளது என்றார்.