February 19, 2019 தண்டோரா குழு
ராமதாசுக்கு வெட்கம், சூடு-சொரணை இல்லை திமுக தலைவர் முக ஸ்டாலின் கடும் விமர்சனம் செய்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக-பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் ஏற்பட்டு உள்ளது. பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒதுக்கப்படும். 21 சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலிலும் அதிமுக போட்டியிடும் என்றும், இந்த தொகுதிகளில் அதிமுகவுக்கு பாமக ஆதரவு அளிக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், வேலூர் மாவட்டம் ஆம்பூர் சட்டமன்ற தொகுதியில் முகவர் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசுகையில்,
இன்று பாமக அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளனர். ஏற்கெனவே இது போன்று அதிமுகவுடன் பாமக கூட்டனி வைத்து தோற்றுவிட்டனர். அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து ஏற்கெனவே ஏழு தொகுதிகளில் அவர்கள் போட்டியிட்ட போது என்ன நிலைக்கு ஆளானார்கள் என்பது தெரியும். 7 தொகுதிகளில் போட்டியிட்டு 9 தொகுதிகளில் தோல்வியடைந்தார்கள் என்று நான் அப்போதே சொன்னேன். சில பேருக்குப் புரியவில்லை. 7 தொகுதிகள் என்பது நாடாளுமன்றத் தொகுதிகள் கொடுத்தது.
இதே பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸும், அவருடைய மகனாகிய அன்புமணி ராமதாஸும் என்னென்ன பேச்சு பேசியிருக்கிறார்கள். நம்மையும் சேர்த்துதான் பேசியிருக்கிறார்கள். அது வேறு. ராமதாஸ் அதிமுகவின் கதை என புத்தகம் போட்டு அதிமுக-வை கடுமையாக விமர்சித்தவர். அவர் தற்போது அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி வைத்திருப்பது வெட்கக்கேடான செயல். அந்தப் புத்தகத்தைப் போட்ட பெரிய மனுஷன் தான் இன்றைக்கு ஊழல்வாதிகளிடம் கூட உட்கார்ந்துகொண்டு கையெழுத்து போடுகிறார். வெட்கம் இல்லை? சூடு இல்லை? சொரணை இல்லை? நான் கேட்கிறேன் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
மேலும், அதிமுக-வுடன் பணத்திற்காகவே பாமக கூட்டணி சேர்ந்துள்ளது. ராமதாசிற்கு நாட்டை பற்றி கவலை இல்லை. அவருக்கு பணத்தை பற்றிதான் கவலை என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.