January 21, 2020
பெரியார் குறித்து ரஜினிகாந்த் பேசிய விவகாரத்தில் அவர் மன்னிப்பு கோராவிடில் பெரும் போராட்டம் நடத்தப்படும் என தமிழ் புலிகள் கட்சி அறிவித்துள்ளது.
சேலத்தில் 1971 ஆம் ஆண்டு பெரியார் தான் நடத்திய ஊர்வலத்தில்ராமன் சீதை சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று செருப்பால் அடித்ததாக துக்ளக் பத்திரிகை விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியிருந்தார். இதற்கு தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் கண்டனம் தெரிவித்திருந்தன. மேலும் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என எதிர்ப்பு குரல் எழுந்தது. ஆனால் இவ்விவகாரத்தில் தான் மன்னிப்பு கேட்க முடியாது என ரஜினிகாந்த் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன்,
பெரியார் குறித்து வெளியிட்ட கருத்துக்கு மன்னிப்பு கேட்காவிட்டால் ரஜினிகாந்தை கண்டித்து பெரும் அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார். மேலும் நடக்காத ஒரு சம்பவத்தை நடந்ததாக பொய்யான கருத்தை ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளதாகவும் திருவள்ளுவன் குற்றம்சாட்டினார்.