February 6, 2020 தண்டோரா குழு
கோவையில் நடந்த திருமணத்தில் பாரம்பரிய முறையில் மாட்டு வண்டியில் மணமக்கள் ஊர்வலம் வந்தனர்.
குறிச்சி பகுதி இடையர்பாளையத்தை சேர்ந்த விமல்குமார் சந்தனமாரி ஆகியோருக்கு இன்று திருமணம் நடைபெற்றது. திருமண வரவேற்பு முடித்து அங்கு தயாராக நிறுத்தப்பட்டு இருந்த மாட்டு வண்டியில் ஏறி அமர்ந்து இருவரும் ஊர்வலமாக சென்றனர். மாட்டு வண்டியில் மணமக்கள் சென்றதை அவ்வழியே வந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
இதுகுறித்து மணமக்கள் கூறுகையில்,
“தற்போது நடைபெறக்கூடிய திருமணங்கள் பழைய மரபுகளையும், பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் மறந்து நடைபெற்று வருகின்றன. இவைகள் அனைத்தும் இளைய தலைமுறையினருக்கு தெரிய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் நாங்கள் திருமணம் முடிந்த பின்னர் மாட்டு வண்டியில் வந்தோம். இது எங்களுக்கு பழைய பாரம்பரியத்தை நினைவு படுத்துவதாக அமைந்துள்ளது.” என்றனர்