February 5, 2019 தண்டோரா குழு
மறைந்த தலைவர்களின் நினைவாக வளைவு கட்டுவது மட்டும் வளர்ச்சி திட்டமா என்று உயர் நீதிமன்றம் தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது.
மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நினைவு வளைவுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டு சென்னை மெரினா கடற்கரை சாலையான காமராஜர் சாலையில் பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரில் 2 கோடியே 52 லட்சம் ரூபாய் செலவில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நினைவு வளைவு கட்டபட்டது. இதனையேடுத்து எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை ஒட்டி,சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா நினைவு வளைவு அமைக்கப்பட்டு சமீபத்தில் எந்த வித ஆரவாரமும் இல்லாமல் திறக்கப்பட்டது. இதற்காக 2.32 கோடி ரூபாயும் செலவிடப்பட்டது.
இந்நிலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு கட்ட தடை கோரிய வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது. அதில், மறைந்த தலைவர்களின் நினைவாக வளைவு கட்டுவது வளர்ச்சி திட்டமா? எந்த திட்டத்தின் கீழ் நினைவு வளைவுகள் அமைக்கப்படுகின்றன? சென்னையில் உள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலைகளின் விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும்.
இதையடுத்து, இவ்வழக்கில் நாளை பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.