November 21, 2020
தண்டோரா குழு
கோவையில் மாநகராட்சி பள்ளியில் படித்து மருத்துவ படிப்புக்கு சேரும் மாணவர்களுக்கு உதவ முன்வந்துள்ள காவல் ஆய்வாளருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
கோவையில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பீளமேடு, குனியமுத்தூர், போத்தனூர், உக்கடம், சரவணம்பட்டி, ரேஸ்கோர்ஸ் உட்பட பல காவல் நிலையங்களில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் சாஸ்தா சோமசேகர் (37). இவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றார். மேலும் போலீஸ் ஸ்பெஷல் டீமிலும் பணி புரிந்துள்ளார்.
இதனிடையே, அவருக்கு மேற்கு மண்டல பகுதிக்கு இடமாற்ற உத்தரவு வந்துள்ளது. ஆதலால், விடுமுறையில் உள்ளார். இந்நிலையில், அவர் நேற்று அவருடைய டுவிட்டர் பக்கத்தில், கஷ்டப்படக் கூடிய மாநகராட்சி பள்ளியில் படித்து மருத்துவ படிப்பிற்கு பணம் கட்ட முடியாத மாணவர் மற்றும் மாணவி ஒருவரை நான் படிக்க வைக்க தயாராக உள்ளேன் என அவருடைய செல் நம்பரையும் பதிவிட்டிருந்தார்.இதைப்பார்த்த அனேக மாவட்டங்களில் இருந்து அவரை தொடர்பு கொண்டு மாணவ, மாணவிகள் உதவி கேட்டு வருகின்றனர்.
இதுகுறித்து சாஸ்தா சோமசேகரிடம் நாம் கேட்டபோது : –
கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்திருந்தது. அதில் கஷ்டப்படக் கூடிய மாநகராட்சி பள்ளியில் படித்து மருத்துவ படிப்பிற்கு தேர்வாக கூடிய மாணவ மாணவிகளுக்கு அரசியல்வாதிகள், திரைப்பட நடிகர்கள், வழக்கறிஞர்கள் போன்றவர்கள் உதவ முன்வரவேண்டும் என்று கூறியிருந்தது. ஆதலால் நானும் என்னால் முடிந்த ஒரு மாணவரை படிக்க வைக்கலாம் என ட்வீட் செய்துள்ளேன். அதற்காக நான் தயாராக உள்ளேன். என்னிடம் பலர் தொடர்பு கொண்டுள்ளார்கள். என்னுடைய ட்விட்டரை பார்த்துவிட்டு காவல் பணியில் உள்ள அதிகாரிகளும் உதவ முன்வந்துள்ளனர். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப் பணி தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் நடைபெறும் என மகிழ்ச்சி பொங்க கூறினார்.
இதனை தொடர்ந்து, சாஸ்தா சோமசேகரன் செயலைப் பாராட்டி காவல்துறை மற்றும் பொதுமக்களிடம் இருந்து அவருக்கு பாராட்டு குவிந்த வண்ணம் உள்ளது.