January 14, 2019
தண்டோரா குழு
பொங்கல் பண்டிகைக்கு பின்னரும் பொங்கல் பரிசு வாங்க விடுபட்டவர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.1000 பரிசுத்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 5ம் தேதி தொடங்கி வைத்தார். ரூ.258 கோடி ரூபாயில் 2.02 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த பரிசுத்தொகுப்பு வழங்கப்படவுள்ளது.
இதற்கிடையில், இத்திட்டத்திற்கு தடை கோரி கோவையை சேர்ந்த சமூக ஆர்வலர் டேனியல் ராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இம்மனு நீதிபதிகள் வறுமை கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.1000 பொங்கல் பரிசு வழங்க கூடாது. வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவரக்ளுக்கு மட்டுமே பொங்கல் பரிசு தர வேண்டும் உத்திரவிட்டனர். இந்த உத்தரவை மாற்றி அமைக்க கோரி தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மேலும் இம்மானு மீதான விசாரணையை எடுத்துக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், சர்க்கரை ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு ஆயிரம் வழங்க அனுமதி அளித்தது.
இந்நிலையில் சென்னையில் 19 லட்சம் ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். அதில் 95 சதவீதம் கார்டுகளுக்கு பொருட்கள் மற்றும் ரூ.1000 வழங்கப்பட்டுவிட்டன. ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் 10-க்கும் குறைவானவர்கள்தான் பொங்கல் பொருட்கள் வாங்காமல் இருந்தனர். விடுபட்டவர்களில் பெரும்பாலான மக்கள் இன்று வாங்கினார்கள்.
இது குறித்து இன்று மன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ்,
97 சதவீதம் வரை பொங்கல் பரிசு 1,000 மற்றும் பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டுவிட்டதாகவும், விடுபட்டவர்களுக்கு பொங்கல் முடிந்த பின்னரும் பொங்கல் பரிசுகள் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.