February 24, 2020
பெண்கள் பாதுகாப்பாக வாழக்கூடிய சிறப்பான நகரமாக கோவை ,சென்னை நகரங்கள் விளங்குகிறது என முதல்வர் பழனிச்சாமி கூறியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் முதல்வர் பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசியவர்,
பெண்கள் பாதுகாப்பாக வாழக்கூடிய சிறப்பான நகரமாக கோவை ,சென்னை நகரங்கள் விளங்குகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. அம்மா பிறந்தநாள் நிகழ்ச்சிகள் இருப்பதால் டெல்லி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. தமிழகத்தில் சிறுபான்மையினர் மக்கள் எந்த அச்சமும் கொள்ளத்தேவையில்லை. திட்டமிட்டு அரசியல் லாபத்திற்காக இஸ்லாமிய மக்கள் தூண்டப்பட்ட போராட்டத்தை நடத்த வைக்கிறார்கள். அவர்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்துகிறார்கள். திமுக 10 ஆண்டுகளுக்கு முன் வைத்த அரசு கடனுக்கு தற்போது வரை வட்டி கட்டப்பட்டு வருகிறது. 10 ஆண்டுகளாக தொடர்ந்து வட்டி கட்டி வருகிறோம்.
ஸ்டாலின் தொடர்ந்து முதலமைச்சர் கனவில் தான் இருக்கிறார். அடுத்த முறையும் அதிமுக தான் ஆட்சிக்கு வரும். நல்ல திட்டங்கள் அமல்படுத்தப்படுவதால் ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. கே சி பழனிச்சாமி அதிமுகவில் இல்லை. அவர் பல முறை குற்றங்களுக்கு சிறை சென்றுள்ளார்.
விவசாயிகளின் நலன் கருதியும், பருவமழையை சேமிக்கவுமே குடிமராத்துப்பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது. மக்களிடையே வெற்றித் திட்டமாக உள்ளது. பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலைக்கு அமைச்சரவையில் இருந்து கவர்னருக்கு தீர்மானம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் தான் நளினியை மட்டும் விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது ஊடகத்தை பற்றி தரக்குறைவாக பேசிய ஆர் எஸ் பாரதிக்கு எதிராக எந்த ஊடகமும் கண்டனம் தெரிவிக்கவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.