March 27, 2026
தண்டோரா குழு
இந்தியாவில் சூரிய ஒளி மின்சாரம், எரிசக்தி சேமிப்பு, ஸ்மார்ட் கிரிட் மேலாண்மை மற்றும் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் கட்டமைப்புகள் ஆகிய துறைகளில் பெரும் வளர்ச்சி வாய்ப்பு உள்ளதாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் வரும் ஏப்ரல் 27 முதல் 29 வரை நடைபெற உள்ள RenewX 2026 (ரினியூஎக்ஸ் 2026) கண்காட்சியை முன்னிட்டு,கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
இந்த சந்திப்பில் இன்பார்மா மார்க்கெட்ஸ் இன் இந்தியா நிறுவனத்தின் சீனியர் குரூப் இயக்குநர் ரஜ்னீஷ் கட்டார் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை சார்ந்த நிபுணர்கள் சந்தோஷ், செல்லப்பன், சிவராம், டெரன்ஸ் அலெக்ஸ், சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
அப்போது அவர்கள் கூறுகையில்,
இந்தியாவில் சோலார் மின் உற்பத்தி திறன் 2014ஆம் ஆண்டு 2.82 ஜிகாவாட் இருந்த நிலையில் தற்போது 143.60 ஜிகாவாட் ஆக உயர்ந்து 50 மடங்கு வளர்ச்சி கண்டுள்ளது என்றனர்.தமிழகம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக விளங்குகிறது. குறிப்பாக கோவை மாவட்டம் சோலார் மின் பலகைகள் அமைப்பில் மாநிலத்திலேயே முன்னிலையில் உள்ளது.
ஜவுளி, உற்பத்தி மற்றும் தொழில்துறை நிறுவனங்கள் அதிக அளவில் சூரிய ஒளி மின்சாரத்தை பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.அக்டோபர் 2025 நிலவரப்படி, கோவையில் 6,000-க்கும் மேற்பட்ட வீடுகளில் சோலார் மின் பலகைகள் நிறுவப்பட்டுள்ளன. மத்திய அரசின் PM Surya Ghar Muft Bijli Yojana திட்டத்தின் கீழ், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 30,000 வீடுகளுக்கு இதை விரிவுபடுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இன்பார்மா மார்க்கெட்ஸ் இன் இந்தியா சார்பில் நடைபெறும் இந்த 10வது பதிப்பு கண்காட்சியில்,சூரிய ஒளி மின்சாரம், எரிசக்தி சேமிப்பு, உயிரி எரிசக்தி, ஸ்மார்ட் கிரிட் தீர்வுகள் உள்ளிட்ட துறைகளில் ஏற்பட்டுள்ள அதிநவீன முன்னேற்றங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் இதில் பங்கேற்க உள்ளன.
இந்த கண்காட்சியில் குறிப்பாக சோலார் புதுமைகள்,எரிசக்தி சேமிப்பு தீர்வுகள், கிரிட் மேலாண்மை மற்றும் மின்சார வாகனங்களுக்கான நவீன சார்ஜிங் கட்டமைப்புகள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.