February 5, 2019 தண்டோரா குழு
கூடலூர் அருகே பாட்டவயல் பகுதியில் ராயின் என்பவரது வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை பிடிபட்டது. ராயின் என்பவரது வீட்டில் புகுந்த சிறுத்தையை கூண்டு வைத்து வனத்துறையினர் பிடித்தனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் பாட்டவயலில், ராயின் என்பவரது வீட்டிற்குள் இன்று சிறுத்தை ஒன்று புகுந்தது. வீட்டிற்குள் சிறுத்தை இருப்பதை பார்த்த வீட்டிலிருந்தோர், உடனடியாக வீட்டை விட்டு அவசர அவசரமாக வெளியேறி, கதவுகளை பூட்டிவிட்டனர். பின்னர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து விரைந்து வந்த வனத்துறையினர், சிறுத்தையின் நடவடிக்கையை கணித்து, மயக்க ஊசி செலுத்தி பிடிப்பது, கூண்டு வைத்து பிடிப்பது உள்ளிட்ட வழிமுறைகளை பற்றி திட்டமிட்டு, இறுதியில், கூண்டு வைத்து பிடித்தனர்.
சுமார் 6 மணி நேர முயற்சிக்குப்பிறகு, சிறுத்தை பிடிபட்டது. பிடிபட்ட சிறுத்தை வனப்பகுதியில் கொண்டு விடப்படும் எனக்கூறப்படுகிறது. வீட்டிற்குள் சிறுத்தை புகுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.