April 14, 2026
தண்டோரா குழு
நாசிக்கில் உள்ள எங்கள் நிறுவனத்தில் இருந்து வரும் புகார்களும் குற்றச்சாட்டுகளும் மிகவும் கவலையும் வேதனையும் அளிப்பதாக உள்ளன என்று டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்தச் சம்பவம் மிகத் தீவிரமாக கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு இருப்பதோடு, குற்றம் சாட்டப்பட்ட ஊழியர்கள் மீது ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும்,தற்போது நடந்து வரும் விசாரணைகளுக்கு நிறுவனம் தனது முழு ஒத்துழைப்பையும் வழங்கி வருகிறது. ஊழியர்களின் எந்தவொரு வற்புறுத்தலுக்கும் அல்லது தவறான நடத்தைக்கும் டாடா குழுமம் சிறிதும் இடம் கொடுக்காது.
உண்மைகளைக் கண்டறியவும், இந்தச் சம்பவத்திற்குக் காரணமான அனைவரையும் அடையாளம் காணவும் தீவிர விசாரணை நடந்து வருகிறது. டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி ஆர்த்தி சுப்பிரமணியன் இந்த விசாரணையைத் தலைமை தாங்கி நடத்துவார்.குற்றவாளிகள் என நிரூபிக்கப்படுபவர்கள் மீது தகுந்த மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
தேவையான நடைமுறை மாற்றங்கள் அல்லது திருத்த நடவடிக்கைகள் உடனடியாகச் செயல்படுத்தப்பட்டு அவை, கண்டிப்பாகப் பின்பற்றப்படும் என்று அவர் கூறியுள்ளார்.