February 10, 2020 தண்டோரா குழு
நடிகர் விஜய் இன்றே நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வருமான வரித்துறை சம்மன் அளித்துள்ளது.
கடந்த 5-ம் தேதி பிகில் பட தயாரிப்பாளர் ஏ.ஜி.எஸ். கல்பாத்தி எஸ்.அகோரம் மற்றும் பைனான்சியர் அன்புசெழியன் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்கள் உட்பட 38 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். மேலும், நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜயை கடந்த 5-ம் தேதி, அழைத்து வந்த வருமான வரித்துறையினர் சென்னை பனையூரில் உள்ள அவரின் வீட்டில் 24 மணி நேரத்துக்கு மேல் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அப்போது, பிகில் படத்திற்காக பெறப்பட்ட சம்பளம் மற்றும் சொத்து விவரம் குறித்த பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர்.
விஜய் வீட்டில் ஆவணங்கள் ஏதும் கைப்பற்றப்படாத போதிலும் மற்ற இடங்களில், நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்க்கு, வரி ஏய்ப்பு செய்தது உட்பட பல்வேறு ஆவணங்களை எடுத்துச் சென்றனர்.இந்நிலையில், ஆவணங்கள் குறித்து விசாரிப்பதற்காக நடிகர் விஜய், எஸ்.அகோரம், சினிமா விநியோகஸ்தர் சுந்தர் ஆறுமுகம், அன்புசெழியன் ஆகியோருக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பி உள்ளது. அத்துடன், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்திற்கு இன்றைக்குள் நேரில் வந்து விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.